புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலம் புனிதப் பயணத்துக்கு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்



ஜெருசலம் புனிதப் பயணம் மேற்கொள்ள அரசின் நிதியுதவியைப் பெற விரும்பும் கிறிஸ்தவர்கள் இந்த மாதம் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஜெருசலம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக கிறிஸ்தவர்களுக்கு தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இப்புனிதப் பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது.

இப் பயணத்தை, வரும் அக்டோபர் முதல் மார்ச் 2020 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பயண காலம் 10 நாட்கள். இதற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம்.

விண்ணப்பப் படிவத்தை  இணையதள முகவரியில்  பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலச மஹால், பாரம்பரியக் கட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

0 Comments