திருச்சியில் தொடங்கியது கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான கைப்பந்து போட்டி



மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி திருச்சி ஜமால்முகமது கல்லூரியில் நேற்று தொடங்கியது.
3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி, கோவை, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 12 கல்லூரிகளின் அணிகள் பங்கேற்றன. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருச்சி மண்டல அலுவலக முதன்மை மேலாளர் சத்தியநாராயணன் நேற்று காலை போட்டியை தொடங்கி வைத்தார்.

முதல் போட்டியில் புனித ஜோசப் கல்லூரி அணி 28-26, 33-35, 25-22 என்ற புள்ளிக்கணக்கில் ஜமால் முகமது கல்லூரி பி அணியை வென்றது.

 2-வது ஆட்டத்தில் ஜமால் முகமது கல்லூரி ஏ அணி திண்டுக்கல் காந்திகிராமிய நிகர்நிலை பல்கலைக்கழக அணியை 25-15, 25-16 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.

3-வது போட்டியில் திண்டுக்கல் ஜி.டி.என். கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி 22-25, 25-23, 25-15 என்ற புள்ளிக்கணக்கில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி அணியை வென்றது.

4-வது போட்டியில் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி அணி 25-18, 25-18 என்ற புள்ளிக்கணக்கில் கோவை டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியை வென்றது.

சென்னை லயோலா கல்லூரி அணி 25-21, 23-25, 25-13 என்ற புள்ளிக்கணக்கில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி அணியை வென்றது.

இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நாளை(செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. 

Post a Comment

0 Comments