தன்னிறைவு பெற்ற தொகுதியாக ராமநாதபுரத்தை மாற்றுவேன்’ - நவாஸ்கனி எம்.பி. பேச்சு



ராமநாதபுரம் நவாஸ்கனி எம்.பி.க்கு பனைக்குளம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பாராட்டு விழா மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா பனைகுளத்திலுள்ள புகாரி ஆலிம் பள்ளிவாசலில் நடைபெற்றது.
முஸ்லிம் லீக் மாவட்ட பொருளாளர் ரபீக் ரகுமான் தலைமை தாங்கினார். செயலாளர் முகம்மது இக்பால் வரவேற்புரையாற்றினார். முஸ்லிம் பரிபாலனசபை, ஐக்கிய முஸ்லிம் சங்கம், முஸ்லிம் நிர்வாக சபை, வாலிப முஸ்லிம் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

மேலும் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் வரிசை முகமது, மாவட்ட செயலாளர் முகம்மது பைசல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர். இதனைத்தொடர்ந்து நவாஸ்கனி எம்.பி. ஏழைகளுக்கு நல உதவிகளை வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:-

மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக என்னை வெற்றி பெறச்செய்து மேலும் மத நல்லிணக்கத்தை வளர்த்து உள்ளனர். என்னை முழுமையாக நம்பி என் மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெறச்செய்த தாங்கள் எனக்கு பாராட்டு விழா நடத்துவது முறையல்ல. எனக்கு வாக்களித்த உங்களுக்கு நான் நன்றி சொல்வதுதான் முறையாகும். 

இந்த பகுதியில் வாழக்கூடிய அனைத்து சமுதாய மக்களும் எனக்கு பெருவாரியான வாக்குகளை வழங்கி உள்ளர்கள். மலேசியா மற்றும் பல்வேறு நாடுகளில் வசிக்கக்கூடிய மக்கள் வாக்களிப்பதற்காக அவர்களது சொந்த ஊருக்கு வந்து எனக்கு வாக்களித்து சென்று இருப்பதையும் என்னால் மறக்க முடியாது. என்மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை வீணாகாமல் உங்களுக்கு ஆற்றவேண்டிய பணிகளை தொய்வின்றி செய்வேன்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நமது மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக இருந்தது. கலெக்டரிடம் நேரடியாக சென்றும், மேலும் சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்து தற்போது தண்ணீர் பஞ்சம் ஓரளவு குறைந்துள்ளது. மேலும் நமது மாவட்டத்தின் மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் பாதுகாப்பு கருதி என்னால் முடிந்த அளவு நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன்.

உங்கள் பகுதிக்கு முடிந்த அளவு தேவையான நலத்திட்ட உதவிகளை அரசிடம் பெற்றுக்கொடுக்க தயங்க மாட்டேன். படிப்படியாக யூனியன் வாரியாக பொதுமக்களை சந்தித்து அவர்களின் தேவையை நேரடியாக கேட்டறிந்து அவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய பணிகளை நான் செய்து கொடுப்பேன். 2 ஆண்டு காலத்தில் ராமநாதபுரம் தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Post a Comment

0 Comments