புதுக்கோட்டை மாவட்டத்தில் குளங்களை சீரமைத்த இளைஞர் மன்ற அமைப்பினருக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்



புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்நிலைகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் அமைப்பினருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. பி.உமாமகேஸ்வரி, அவர்கள் 23.09.2019 அன்று பாராட்டு சான்றிதழ்களை வழங்கி தெரிவித்ததாவது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து, நீர்நிலைகளை மேம்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க செய்யும் வகையில் குடிமராமத்துப் பணித்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இத்தகைய நடவடிக்கை அனைத்து தரப்பு மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் பொதுப்பணித் துறையின் சார்பில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 66 குளங்கள் ரூ.20.27 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மேலும் அக்னியாறு வடிநிலக் கோட்டத்தின் சார்பில் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரும் திட்டத்தில் 12 பணிகள் ரூ.1.42 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு 27.59 கி.மீக்கு தூர்வாரும் பணிகள்
முடிவுற்றுள்ளது. இதே போன்று ஊரக வளாச்சித்துறையின் சார்பில் 650
சிறுபாசனக் குளங்கள் மற்றும் ஊரணிகள் தூர்வாரும் பணி ரூ.33.50 கோடி
மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நீர் நிலைகளை தூர்வாரும் பணிகளுக்கு உருதுணையாக பொதுமக்களும், தனியார் அமைப்பினரும் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், சேந்தன்குடி கிராமத்தில், ஆவுடானி ஊரணி மற்றும் வரத்து வாரிகளை தூர்வாரிய சேந்தன்குடி இளைஞர் மன்ற அமைப்பினருக்கும், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், ஏம்பல் கிராமத்தில், செட்டி ஊரணி, வெள்ள ஊரணி, மணியக்காரர் ஊரணி மற்றும் மரத்து ஊரணிகளை சீரமைத்த மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் அமைப்பினரை பாராட்டி சான்றிதழ் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்து, இதுபோன்ற ஆக்கப்பூர்வமான பணிகளை செயல்படுத்துவது பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும். மேலும் இதுபோன்று தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளும் தனியார் அமைப்பினருக்கு இனிவரும் நாட்களில் அவர்களின் சிறப்பான பணிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளின் போது ஆக்கிரமிப்புகள் ஏதேனும் இருந்தால் அவற்றை அகற்றி தருவதற்கு தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments