திருச்சி விமானநிலையத்தில் ரூ.1 கோடிக்கு புதிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.



திருச்சி விமான நிலையத்தில் 2009-ம் ஆண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக 53கண்காணிப்புகேமராக்கள் அமைக்கப்பட்டது. இவை விமானநிலையத்தை முழுவதுமாக கண்காணிக்க போதுமானதாக இல்லை.

இதனால் கடந்த 2017-ம் ஆண்டு விமானநிலைய மேம்பாட்டு நிதியில் இருந்து கூடுதலாக 51 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு விமானநிலையத்தின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது. இந்த கேமராக்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கண்காணித்து வந்தனர்.

நவீன கண்காணிப்பு கேமராக்கள்

இந்தகண்காணிப்புகேமராக்கள் அனைத்திலும் 24 மணி நேரமும் வருடத்தின் 365 நாட்களும் கண்காணிக்கும் பணி நடைபெற்று வந்தது. அத்துடன் இதில் பதிவான காட்சிகள் அனைத்தும், பாதுகாப்பு படையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மேலும் பாதுகாப்பை பலப்படுத்த விமானநிலைய நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் இருந்து ஓடுதளத்தில் விமானம் உயரே பறக்கும் இடம் வரை கண்காணிக்கும் வகையில் ரூ.1 கோடி செலவில் புதிதாக 64 நவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை நொய்டாவை சேர்ந்த தனியார் நிறுவனம் அமைத்துள்ளது.

தொடக்க விழா

இதன் தொடக்க விழா விமான நிலைய வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது. விமான நிலைய இயக்குனர் குணசேகரன் குத்துவிளக்கு ஏற்றி, புதிய கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்தார். அப்போது மத்திய பாதுகாப்பு படை உதவி கமிஷனர் ஜஸ்ப்ரீத் சிங், விமான நிலைய துணை பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன், உதவி பொது மேலாளர் விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதன் மூலம் தற்போது திருச்சி விமான நிலையத்தில் 168 கேமராக்கள் உதவியுடன் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும் 4 பெரிய எல்.சி.டி. கண்காணிப்பு திரை மூலம் மத்திய பாதுகாப்பு படையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments