நேர்மையாக ‘லீவ் லெட்டர்’ எழுதிய மாணவனுக்கு குவியும் பாராட்டு



திருவாரூர் மாவட்டம் மேல ராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேர்மையாக உண்மையைச் சொல்லி விடுப்பு எடுத்த மாணவனுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் மேல ராதாநல்லூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு தீபக் என்ற மாணவர் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவருடைய தந்தை விஜயராகவன் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில் மாணவன் பள்ளியில் சிறந்த மாணவனாகவும் ஆசிரியர்கள் மத்தியில் மிக நல்ல மாணவனாக வலம் வருகிறார். தற்போது நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் 90 சதவீத மதிப்பெண்ணை எடுத்துள்ளார்.

இந்நிலையில் மாணவன் தீபக் நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுப்பு எடுத்துள்ளார். இதற்காக அந்த மாணவன் தனது வகுப்பு ஆசிரியருக்கு அனுப்பியுள்ள விடுப்புக் கடிதத்தில், தான் நேற்று ஊரில் நடந்த கபடி போட்டியை இரவு முழுவதும் கண் விழித்து பார்த்ததால் உடல் சோர்வாக உள்ளது. எனவே தனக்கு ஒரு நாள் விடுப்பு வேண்டுமென கூறியுள்ளார். அதையடுத்து மாணவனுக்கு பள்ளி ஆசிரியரும் விடுப்பு அளித்துள்ளார்.

இதனைக்கண்ட வகுப்பாசிரியர் மணிமாறன் மாணவனை பாராட்டி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவைப் படித்த அனைவரும் நேர்மையாக விடுப்பு கடிதம் அளித்த மாணவனுக்கும் அப்பள்ளி ஆசிரியருக்கும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments