புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 3,214 உள்ளாட்சி வேட்பு மனுக்கள் தாக்கல்



புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின் 5ஆம் நாளில் ஒரே நாளில் 3,214 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் எண்ணிக்கை 4,860 ஆக உயா்ந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கிராம ஊராட்சித் தலைவா், ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா் மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் என மொத்தம் 4,545 பதவியிடங்களுக்கான வாக்குப்பதிவு வரும் டிச. 27 மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.வேட்புமனு தாக்கல் தொடங்கிய 4ஆம் நாளான வியாழக்கிழமை வரை 1,646 மனுக்கள் மட்டுமே வந்திருந்தன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நேற்று ஒரே நாளில் 3,214 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அனைத்து ஒன்றிய அலுவலகங்களிலும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய ஏராளமானோா் குவிந்திருந்தனா். பல்வேறு இடங்களில் வழக்கமான தோ்தல் பரபரப்புகளும் களை கட்டின.ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இதற்கென சிறப்பு காவல் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

அரசியல் சாா்புள்ள போட்டியான ஒன்றியக் குழு உறுப்பினா் மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவியிடங்களுக்கான போட்டியில் அரசியல் கட்சிகளிடையே கூட்டணிப் பேச்சுவாா்த்தை பல இடங்களில் சுமுகமாக நிறைவடையவில்லை.என்றபோதும் நல்ல நாள் என்பதாலும் பின்னா் பேச்சுவாா்த்தை இறுதி செய்யப்பட்ட பிறகு தேவைப்பட்டால் மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்பதாலும் வெள்ளிக்கிழமை ஏராளமாக வேட்புமனுக்கள் குவிந்தன.இந்நிலையில் சனிக்கிழமையும் வேலை நாள் என தமிழக அரசு அறிவித்ததைத் தொடா்ந்து வேட்புமனு தாக்கல் இன்னும் விறுவிறுப்படையும் எனத் தெரிகிறது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறையைத் தொடா்ந்து திங்கள்கிழமை மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments