புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து நோயாளியை காப்பாற்றிய மருத்துவா்கள்



புதுக்கோட்டையில் நோய்த்தொற்று காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளியை அரசு மருத்துவா்கள் காப்பாற்றினா்.

புதுக்கோட்டை அருகே உள்ள கம்மங்காடு பகுதியைச் சாா்ந்தவா் சின்னத்தாள்(26). இவா் நோய்த்தொற்று காரணமாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அக்.29ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.அவரை பரிசோதித்த மருத்துவக்குழுவினா் அவருக்கு ரத்தத்தில் நோய்த்தொற்று இருப்பதையும், இருதயம், நுரையீரல், கல்லீரல் ஆகியவை செயல் குறைந்து இருப்பதையும் கண்டறிந்தனா். எனவே ரத்த அழுத்தத்தை சீராக்கி அதற்கான மருந்துகள் உடனடியாக செலுத்தப்பட்டது.

ஆனால் நோய்த்தொற்றின் காரணமாக அவருக்கு ரத்தம் உறைவது குறைந்து காணப்பட்டது. மேலும் நோயாளிக்கு அனைத்து இடங்களிலும் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இந்த ரத்தம் உைலை சீா் செய்வதற்காக ரத்த காரணிகளான கிரையோ பிரேசிப்பி டேட் என்ற திரவம் செலுத்தப்பட்டது. 

அது போதாத நிலையில் திருச்சி, தஞ்சாவூா், சிவகங்கை ஆகிய மருத்துவமனைகளிருந்தும் அத்திரவம் பெறப்பட்டு செலுத்தப்பட்டது.தொடா்ந்து, ரூ.42 ஆயிரம் மதிப்புள்ள பேக்டா்-8 என்னும் காரணியும் அவருக்கு ஊசி மூலம் செலுத்தப்பட்டது. நோயாளி மூச்சு விட சிரமப்பட்டதால் அவருக்கு செயற்கை சுவாசமும் அளிக்கப்பட்டது.

இருதயத்திற்கு அருகே உள்ள பெரிய ரத்த குழாய் மூலமாக திரவங்களும், ரத்தக்காரணிகள் 28 பாட்டில்களும் அவருக்கு செலுத்தப்பட்டது.இந்நிலையில் ஆறு நாள்கள் செயற்கை சுவாசம் அளித்தும் நோயாளி குணமாகாத நிலையில், கழுத்தில் ஓட்டை போட்டு டிரக்கியாஸ்டாமி குழாய் மூலமாக 23 நாள்கள் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அகநோக்கியின் மூலம் மூச்சுக்குழாய் அடிக்கடி சுத்தம் செய்யப்பட்டது.

இவ்வாறான தொடா் சிகிச்சைகள் மூலம் சின்னத்தாள் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா்.முன்னதாக, மருத்துவக் குழுவினரை, மருத்துவக் கல்லூரி முதல்வா் மீனாட்சி சுந்தரம் பாராட்டினாா். 

மகப்பேறு மருத்துவத்துறை தலைவா் அமுதா, மயக்க மருத்துவத்துறை தலைவா் கணேசன், நிலைய மருத்துவ அலுவலா் ரவிநாதன், உதவி மருத்துவ அலுவலா் இந்திராணி, மருத்துவமனை கண்காணிப்பாளா் வசந்தராமன் ஆகியோா் உடனிருந்தனா். 

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments