புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது கலெக்டர் தகவல்




புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27-ந் தேதி மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

இதில் அன்னவாசல், விராலிமலை, குன்றாண்டார்கோவில், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு முதல் கட்டமாக வருகிற 27-ந் தேதியும், அறந்தாங்கி, அரிமளம், ஆவுடையார்கோவில், பொன்னமராவதி, மணமேல்குடி, திருமயம் மற்றும் திருவரங்குளம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் 2-வது கட்டமாக 30-ந் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


இதற்கான வேட்பு மனுக்கள் இன்று(திங்கட்கிழமை) முதல் 16-ந் தேதி வரை விடுமுறை நாட்கள் தவிர்த்து பிற நாட்களில் அதற்கென வரையறுக்கப்பட்ட இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்படும். பெறப்படும் வேட்பு மனுக்கள் வருகிற 17-ந் தேதி காலை 10 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். வேட்பு மனுக்களை 19-ந் தேதி பிற்பகல் 3 மணி வரை திரும்ப பெற்று கொள்ளலாம். வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கை ஜனவரி மாதம் 2-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் முதல் கூட்டம் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் ஜனவரி மாதம் 6-ந் தேதி நடைபெறும். அன்றைய தினம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும்.

கிராம ஊராட்சி துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் மாவட்ட ஊராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் ஜனவரி மாதம் 11-ந் தேதி நடைபெற உள்ளது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments