புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்... மாவட்ட ஆட்சியர் தகவல்.!



புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.


தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200 மும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டிற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இத்த்pட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்குமேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ, மாணவியருக்கு இவ்உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்கள் வரத்தேவையில்லை.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் அதற்கும் கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்றவர்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த ஒரு திட்டத்திலும் உதவித்தொகை பெறுபவராக இருக்க கூடாது.

இந்த உதவித் தொகை பெறுவதற்கு மேற்காணும் தகுதிகள் உள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் வருடம் முழுவதும் வழங்கப்படும். மேலும் இவ் உதவித்தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் இவ் உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது.

மேலும் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெறும் பயன்தாரர்கள் ஏப்ரல் 2020 முதல் மே 2020 வரையிலான காலத்தில் சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்காமல் இருக்கும் பயன்தாரர்கள் ஆகஸ்ட் 2020-க்குள் சுய உறுதிமொழி ஆவணத்தை சமர்ப்பிக்கலாம். சுய உறுதிமொழி ஆவணம் இக்கால அவகாசத்தில் பெறப்பட்ட பின்னரே 30.09.2020 உடன் முடிவடையும் காலாண்டுக்கு தகுதியின் அடிப்படையில் இப்பயன்தாரர்களுக்கு வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments