புதுக்கோட்டையில் 'நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர் சங்கத்தினர் பாடைகட்டி நூதன போராட்டம்.



எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேர ‘நீட்‘ என்னும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு அனுமதிக்கப்பட்ட மையங்களில் நேற்று நடைபெற்றது. இந்தநிலையில், ‘நீட்‘ தேர்வுக்கு தயாரான 3 பேர் நேற்று முன்தினம் வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களின் உயிரோடு விளையாடும் ‘நீட்‘ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் புதுக்கோட்டையில் இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் நேற்று நூதன போராட்டம் நடந்தது. அப்போது அவர்கள், சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன் தலைமையில் ‘நீட்‘ என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகத்தை பாடை கட்டி அதனை 4 பேர் கீழ ராஜ வீதியில் இருந்து தூக்கிக்கொண்டு அண்ணாசிலை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, ஊர்வலமாக வந்தவர்களை தடுத்து நிறுத்தி, தங்களது எதிர்ப்பை வேறு வழியில் தெரிவிக்கும்படியும், கொரோனா கால கட்டத்தில் இதுபோன்று போராட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என எடுத்துக் கூறினார். 

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் முக கவசம் அணியாமல் பங்கேற்றிருந்தனர். அதனையும் சுட்டிக்காட்டிய இன்ஸ்பெக்டர், அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Post a Comment

0 Comments