புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தேசிய குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்.!



மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது அறிவிக்கப்பட்டு தகுதி வாய்ந்த குழந்தைகள், தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து இணையதள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூகசேவை போன்ற துறைகளில் வீரதீர செயல் புரிந்த தனித்தகுதி படைத்த குழந்தைகளை அங்கீகரிக்கும் விதமாக பால சக்தி புரஷ்கார் விருது என்னும் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. 

இவ்விருது ரூ.1 லட்சத்துக்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை புத்தகம் ஆகியவற்றை கொண்டதாகும். குழந்தைகள் மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் போன்ற துறைகளில் சிறப்பாக சேவை செய்த தனிபட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் விதமாக பால கல்யாண் புரஷ்கார் என்னும் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. 

தனிப்பட்ட நபர்களுக்கான விருதிற்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். நிறுவனங்களுக்கான விருதிற்கு ரூ.5 லட்சம் காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். இந்த விருதுகள் அடுத்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 26-ந் தேதி வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை வருகிற 28-ந் தேதிக்குள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். 

இவ்விருதுகளுக்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் மத்திய அரசின் மகளிர் மற்றும் சிறார் மேம்பாட்டு அமைச்சகத்தின் www.nca-wcd.nic.in என்னும் இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments