புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு.!



புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள வெட்டிவயல் கோவில் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் இலக்கியா (வயது 29). இவரது கணவர் மோகன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இந்தநிலையில், இலக்கியா தனது 2 குழந்தைகள் மற்றும் பெற்றோர், சகோதரர் ஆகியோருடன் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

பின்னர் அவர், கலெக்டர் அலுவலக வளாக முன் பகுதியில் கார் நிறுத்துமிடம் அருகே திடீரென மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து இலக்கியாவை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். பின்னர் அவர், தனது குடும்பத்தினருடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருக்கோகர்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி மற்றும் போலீசார் விரைந்து வந்து இலக்கியாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது மாமனார், மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியது தொடர்பாக அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்த புகாரில் சமாதானம் பேசுவதாக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மற்றும் சிலர் சேர்ந்து தன்னை மிரட்டி வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தீக்குளிக்க முயன்று போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

மேலும், ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் தி.மு.க.வை சேர்ந்தவர் என்றார். இதைத்தொடர்ந்து இலக்கியா மற்றும் அவரது குடும்பத்தினரை அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments