கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பகுதியில் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைத்து தரக்கோரி SDPI கட்சி மற்றும் அவுலியா நகர் பகுதி மக்கள் போராட்டம்.!!



கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பகுதியில் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைத்து தரக்கோரி SDPI கட்சி மற்றும் அவுலியா நகர் பகுதி மக்கள் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பகுதியில், அடிப்படை வசதிகளான சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைத்து தரக்கோரி SDPI கட்சி மற்றும் அவுலியா நகர் பகுதி மக்கள் சார்பாக போராட்டம் நடைபெற்றது. 

 இப்போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் அவுலியா நகர் பகுதிக்கு ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட 5 சாலைகள் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் வசதியை உடனடியாக போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்தித் தர வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இப்போராட்டம் தொடர்பாக அப்பகுதியில் வசிப்பவர்கள் சொல்லும்பொழுது, நாங்கள் வசிக்கும் இந்த அவுலியா நகர் பகுதி மிகவும் தாழ்வாக உள்ளது. இங்குள்ள 5 முக்கிய வீதிகளில் இதற்கு முன்னால் வரை 3 வீதிகளில் மட்டுமே சிமெண்ட் சாலைகள் அமைக்கப் பட்டிருந்தது. சாலைகள் அனைத்துமே கடந்த பத்து வருடங்களுக்கு முன்னாள்  போடப்பட்டவை. நாளடைவில் அந்த 3 சாலைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. எங்கள் பகுதியில் கழிவு நீர் வாய்க்கால்கள் இதுவரை ஏற்படுத்தி தரப்படவில்லை. இதனால் சிறிய மழை பெய்தாலும் எங்கள் வீடுகளுக்குள் மழைநீர் வந்துவிடுகிறது. 
 
இப்பகுதியில் சரியான வடிகால் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வீதிகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக இங்குள்ள பலரும் பலவிதமான நோய்த் தொற்றுகளுக்கு ஆளாகின்றனர். சுகாதாரக்கேடு காரணமாக பல கால்நடைகளையும் நாங்கள் இழந்திருக்கிறோம்.

இதற்காக கடந்த ஐந்து வருடங்களாக இப்பகுதி மக்கள் இப்பிரச்சனைகளை சரிசெய்யும் விதமாக தொடர்ந்து போராடி வருகின்றோம். மேலும் ஒவ்வொரு வருடமும் மழைக்காலங்கள் வருவதற்கு முன்பே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு மூலமாக எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி புகார் மற்றும் கோரிக்கை மனுக்களை அளித்திருந்தோம். 

கடந்த வருடம் இது சம்பந்தமாக இப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடியதன் விளைவாக, எங்கள் பகுதிக்கு வருகை தந்த வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான குழு எங்கள் பகுதியை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். அதன்படி அத்துறை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலமாக முறையான திட்டமிடல் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதன்படி 1.25 கோடி ரூபாய்க்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அத்திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 
தற்போது கண்துடைப்பாக இங்குள்ள மூன்று தெருக்களில் மற்றும் சாலைகள் அமைப்பதாக அரசு ஆணை பெற்று வந்து இருக்கிறார்கள். ஆனால் இப்பகுதி மக்கள்  5 சாலைகள், கூடவே வாய்க்கால் வசதியோடு ஏற்படுத்தி தரவேண்டும் எனக் கேட்டிருந்தோம். ஆனால் இங்கு கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாமல் இந்த சாலைகள் மட்டுமே அமைவதால் தாழ்வாக இருக்கும் எங்கள் வீடுகளில் கழிவுநீர் செல்லும் பிரச்சினையில் இருந்து விடுபட எங்களுக்கு எந்தவிதமான நிரந்தர தீர்வு கிடைக்கப் போவதில்லை. ஆகவே அரசு உடனடியாக எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments