புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பள்ளிக்கூடங்களில் தங்க வசதி... மழை பாதிப்பை தொலைபேசியில் தெரிவிக்க ஏற்பாடு.!!



புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 60-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்களில் தங்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

‘நிவர்’ புயல் நாளை (புதன்கிழமை) பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் நேற்று பகலில் வானம் கொஞ்சம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ‘நிவர்’ புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கடந்த கால நிகழ்வுகளை கருத்தில் கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள், பாதிப்பு வரக்கூடிய இடங்களில் உள்ள பொதுமக்கள் தங்குவதற்கான மாற்று இடங்கள், தீயணைப்புத்துறையில் உள்ள பாதுகாப்பு உபகரணங்கள் அதன் தற்போதைய செயல்பாடு காவலர்களின் எண்ணிக்கை என ஒவ்வொரு துறை வாரியாக ஆய்வு செய்யப்பட்டன. கூட்டம் முடிந்ததும் கலெக்டர் உமாமகேஸ்வரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

‘நிவர்’ புயலை எதிர்கொள்ள மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதே போன்று பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்க கூடிய 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது 04322-222207 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

மாவட்ட நிர்வாகம் கூறும் பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் தவறாது பின்பற்ற வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மின்சாரத்துறை, தீயணைப்புத்துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மைத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் இணைத்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளின் தலைமையாசிரியரிடம் கூறி பள்ளி கட்டிடங்களை தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்க வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ‘நிவர்’புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ள பாதிப்பின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினரின் ஒத்திகையை கலெக்டர் பார்வையிட்டார். கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த் மோகன் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments