ரேஷன் அட்டைக்கு ரூ.2,500 பொங்கல் பரிசு; தமிழக மக்களுக்கு மெகா சர்ப்ரைஸ்!




அரிசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகையை இரண்டரை மடங்காக அதிகரித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சேலம் எடப்பாடியில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கினார். இதையடுத்து பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், அடுத்த ஆண்டு பொங்கல் பரிசாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். துண்டு கரும்புக்கு பதிலாக ஒரு முழு நீளக் கரும்பு அளிக்கப்படும்.

இது வரும் ஜனவரி 4ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும். இதற்கான டோக்கன் வீடு வீடாக சென்று வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் ரேஷன் கடைகளுக்கு நேரடியாக வந்து பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளலாம். இதன்மூலம் 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர் என்று தெரிவித்துள்ளார்.
வழக்கமாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு உடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை இரண்டரை மடங்கு அதிகமாக ரொக்கம் வழங்கப்படுவது தமிழக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை ஒட்டி மக்களை கவர ஆளுங்கட்சியின் வகுத்துள்ள வியூகமாக இருக்கும் என்று சிலர் விமர்சித்துள்ளனர்.

அதேசமயம் கொரோனா ஊரடங்கால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் தமிழக மக்களுக்கு அரசின் அறிவிப்பு சற்றே ஆறுதலாக இருக்கும் என்றும் கூறுகின்றனர். கொரோனா பாதிப்பால் தமிழக அரசு பெரும் நிதிச்சுமையில் இருக்கும் சூழலில், பொங்கல் பரிசு அறிவிப்பு மேலும் சுமையாக மாறக்கூடும்.

ஆனால் எல்லாவற்றையும் சமாளிக்கும் திறன் மாநில அரசிடம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் இலவசங்களுக்கு பதிலாக வேலைவாய்ப்பை பெருக்கும் நோக்கில் திட்டங்களை செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments