‘புரெவி' புயல் பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு




                    கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘புரெவி' புயல் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் காற்றின் அதிகம் இல்லாவிட்டாலும் மழை அதிகமாக பெய்தது. இந்த மழையினால் வேளாண் பயிர்கள், நெற்பயிர்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. மேலும் வீடுகள் மற்றும் குடிசைகள் சேதமடைந்தன. இந்த நிலையில் ‘புரெவி' புயல் பாதிப்பினை ஆய்வு மேற்கொள்ள மத்திய குழுவினர் 8 பேர் தமிழகம் வந்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் அசுடோஷ் அக்னிஹோத்ரி, மத்திய வேளாண்மை துறை அமைச்சக இயக்குனர் டாக்டர் மனோகரன், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சக மண்டல அலுவலர் ரனன்ஜெய் சிங், மத்திய நிதித்துறை அமைச்சகம் துணை இயக்குனர் அமித் குமார், மத்திய மின்சார ஆணையம் உதவி இயக்குனர் சுபம் கார்க், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் உதவி ஆணையாளர் மோகித் ராம், மத்திய மீன்வள துறை ஆணையர் டாக்டர் பால் பாண்டியன், மத்திய நீர்வள ஆணைய இயக்குனர் ஹர்ஷா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் வந்தனர்.



பயிர்கள் சேதம்

திருவரங்குளம் வட்டாரம், கத்தக்குறிச்சி ஊராட்சி, நம்புகுழி கிராமத்தில் சேதமடைந்த நெற்பயிர்களையும், தெட்சினாபுரம் கிராமத்தில் சேதமடைந்த மக்காச்சோளப் பயிர்களையும் மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த குழுவினருடன் தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான பனீந்திர ரெட்டி, மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர். பயிர் சேத பாதிப்புகள் குறித்து விவசாயிகள் மற்றும் அலுவலர்களிடம் மத்திய குழுவினர் விளக்கமாக கேட்டறிந்தார்கள். மேலும் பயிர் சேத விபரங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி மூலமும் விளக்கப்பட்டது.

இந்த ஆய்வின் போது வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனர் (சென்னை) கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், வேளாண் இணை இயக்குனர் சிவக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கணேசன், துணை இயக்குனர் பெரியசாமி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். ஆய்வை முடித்த பின் மத்திய குழுவினர் தஞ்சாவூர் புறப்பட்டு சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments