அரசு கல்லூரி மாணவர்களுக்கு 4 மாதங்களுக்கு இலவச டேட்டா கார்டு வழங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு




தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 
தமிழக அரசு எடுத்த பல்வேறு சீரிய நடவடிக்கைகளின் காரணமாக உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களின் சேர்க்கை விகிதம் தமிழ்நாட்டில் 32 சதவீதத்திலிருந்து 49 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மேலும், கல்லூரி மாணாக்கர்கள் சிறந்த கணினி திறன்களை பெற்றிட மாண்புமிகு அம்மாவின் அரசு, அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணைய வழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த இணைய வழி வகுப்புகளில் மாணாக்கர்கள் கலந்து கொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணாக்கர்களுக்கு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி தரவு (2 GB Data)பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா தரவு அட்டைகள் (Data Cards) வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

இக்கோவிட் பெருந்தொற்று காலத்திலும் இணைய வழி வகுப்புகள் மூலமாக சிறந்த முறையில் கல்வி கற்றிட தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா தரவு அட்டைகளை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியில் மேன்மேலும் சிறக்க வேண்டுமென்று மாணாக்கர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments