புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.3½ கோடி மதிப்பீட்டில் அதிநவீன இருதய சிறப்பு சிகிச்சைப் பிரிவு துவக்கம்



புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.3.5 கோடி அமைக்கப்பட்ட அதிநவீன இருதய சிறப்பு சிகிச்சை பிரிவை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.3.5 கோடி மதி்ப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய இருதய சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் உள்ளன. தற்போது ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கேத்லாப் சிகிச்சைப் பிரிவு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்மூலம், மாரடைப்பு, ரத்தக்குழாயில் அடைப்பை எளிதாக கண்டறிய முடியும். மேலும், ரத்தக்குழாய் அடைப்புக்கு பலூன் சிகிச்சை, இருதய வால்வு சுருக்க நோய்களுக்கு பலூன் சிகிச்சை, இருதயத்தில் ஏற்பட்ட ஓட்டைகளை அடைக்கும் சிகிச்சை, செயற்கை இருதய துடிப்பு கருவி பொருத்துதல், இருதயத்தில் உள்ள ரத்தக்குழாயில் அழுத்தங்களை கண்டறிதல், ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்புகளை சரிசெய்தல் போன்ற பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.

ஏழை, எளிய மக்களுக்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் இச்சிகிச்சைகள் அளிக்கப்படும். இருதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இங்கேயே சிகிச்சை அளிக்கப்படுவதால் பிற மாவட்டங்களுக்கு செல்ல அவசியம் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திக் தொண்டைமான், மாவட்ட வேளாண் விற்பனை குழுத்தலைவர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.பூவதி வரவேற்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments