ராகுல் காந்திக்கு விருந்து கொடுத்து அசத்திய புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள்.! காளான் பிரியாணி ரொம்ப நல்ல இருக்கு.. கிராமத்து சமையல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி!



தமிழகத்தில் அண்மையில் பிரசார பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி, மண் தரையில் சமையல் கலைஞர்களுடன் அமர்ந்து காளாண் பிரியாணியை சாப்பிட்டார். இதுதவிர, பிரியாணிக்கு தயிர் பச்சடி செய்து அசத்தினார். இந்த வீடியோ யூடியூபில் நேற்று முன்தினம் இரவு வெளியாகி 24 மணி நேரத்தில் 50 பேர் லட்சம் பார்த்துள்ளனர். இவர்களில், பலரும் வரவேற்று பாராட்டி உள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 3 மாதங்களில் வரவிருப்பதையடுத்து அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி கடந்த 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுற்று பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் தொழில் நிறுவன நிர்வாகிகள், விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்ட பலரிடம் ராகுல்காந்தி பேசினார். இந்த பிரசாரத்தின்போது ராகுல்காந்தி, பொதுமக்களிடம் சகஜமாக பேசி பிரசாரம் செய்தது அனைவரையும் கவர்ந்தது.

தற்போது, ராகுல்காந்தியே காளான் பிரியாணிக்கு சமையல் கலைஞர்களுக்கு உதவியாக தயிர் பச்சடி செய்து, தரையில் அமர்ந்து உணவருந்திய வீடியோ வெளியாகி உள்ளது. அதாவது, கடந்த 25ம் தேதியன்று கரூர் பஸ் ஸ்டாண்டில் பிரசாரத்தில் பேசி முடித்த பின் ராகுல்காந்தி, அரவக்குறிச்சி அடுத்த பெட்டான்கோட்டையில் ஒரு காட்டு பகுதியில் உணவருந்த ஏற்பாடு செய்யப்பட்டது.  

புதுக்கோட்டை மாவட்டம் வீரமங்கலம் பகுதியில் வசிக்கும் 5 பேர் அடர்ந்த முருங்கைமர தோட்டத்தில் காளாண் பிரியாணி சமைக்க தொடங்கினார்கள்.  சரியாக 3 மணிக்கு அங்கு வந்த ராகுல்காந்தியை 5 பேரும் ‘வெல்கம் டூ தமிழ்நாடு ராகுல்ஜி’ என்று புன்னகையுடன் வரவேற்றனர். அதற்கு ராகுல், ‘‘தேங்க்யூ.. தேங்க்யூ’’ என்று கைகூப்பி தெரிவித்தார். பின்னர், ‘‘நம்ம சாப்பாட்டை சாப்பிடனும்னு ஆசைப்பட்டு வந்திருக்கீங்க’’ என்று சமையல் தொழிலாளர்கள் கூற, ‘‘வெல்கம்’’ என்று புன்னகையுடன் ராகுல் கூறினார். அதைத்தொடர்ந்து, ‘‘உங்களது வீடியோக்களை எல்லாம் யூ டியூப்பில் நான் பார்த்திருக்கிறேன். முதல்லயே வரனும்னு நினைச்சேன். நேரமில்லாம முடியல. இப்ப வந்திருக்கேன்.

என்ன பண்ணிட்டு இருக்கிங்க... நான் சேர்ந்துக்கலாமா உங்களோட’’ என்று ராகுல் கேட்க, ‘‘பெரிய ஆளு... நம்மகூட சேர்ந்து ஹெல்ப் பண்றேன்னு சொன்னது ரொம்ப சந்தோஷமா இருக்குது’’ என்று சமையல் கலைஞர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே காளான் பிரியாணி சமையல் நடந்து கொண்டிருந்ததால், சமையல் கலைஞர்கள் உதவியோடு தயிர் பச்சடி செய்தார் ராகுல். அப்போது சமையல் கலைஞர்கள் சொன்னதை கேட்டு, ‘‘இது வெங்காயம்.. தயிர்... என்று சொல்லிவிட்டு இதை நான் கலக்கலாமா’’ என ராகுல் கேட்க, அவர்கள் ‘‘யெஸ் சார்..’’ என்றனர். 

சிறிது நேரத்தில், வெங்காயம் என ராகுல்கூறி தட்டில் இருந்த வெங்காயத்தை பாத்திரத்தில் கொட்டினார். பின்னர், தயிர் பானையை கையில் எடுத்து, ‘தயிர்...’ என்று புன்னகையுடன் கூறி பாத்திரத்தில் ஊற்றினார். அதன்பின், கல் உப்பு என சொல்லி பாத்திரத்தில் போட்டார். இதன்பின், கரண்டியை கையால் பிடித்து பச்சடியை தயார் செய்து சுவை பார்த்து ‘குட்’ என்று சொன்னார். அதை கேட்ட 5 பேரும், ‘நீங்கள் தயாரித்தது, அதனால்தான் அது சுவையாக உள்ளது’ என்றனர்.

அதைத்தொடர்ந்து கலைஞர்கள், காளாண் பிரியாணியை பாத்திரத்தில் கிளறி மேல்தட்டில் வைத்தனர். அதை பார்த்தது மிகுந்த மணம் முகர்ந்து, ‘‘லுக்கிங் வெரி நைஸ்’’ என்று ராகுல் சொல்ல அவர்கள் தேங்க்ஸ் சார் எனக்கூறினார்கள். அதன்பின், பனை ஓலை பாயை கலைஞர்கள் விரிக்க ராகுல் அமர்ந்தார். அவருடன் சமையல் கலைஞர்களும், ஜோதிமணி மற்றும் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோரும்  அமர்ந்தனர். 

அவர்களுடன், ‘‘வாட்ஸ் யுவர் நெக்ஸ்ட் ஸ்டெப்’’ என ராகுல் கேட்க, ‘‘வெளிநாடு போவதுதான் எங்களது கனவாக இருந்துச்சு... அதுதான் எங்களை உணவை செய்யனும்னு தோணுச்சு... இதை வெளிநாடுகளில் போய் சமைக்கணும்’’ என்று சமையல் கலைஞர்கள் தெரிவித்தனர். இதற்கு, ‘‘முதலில் எந்த நாட்டில் சமைக்கணும்னு ஆசைபடுறிங்க’’ என்று ராகுல் கேட்க, ‘முதல்ல அமெரிக்கா, அடுத்தது தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா என எந்த நாடாக இருந்தாலும் சரி’ என்று அவர்கள் சொன்னார்கள்.

உடனே, நியூயார்க் சிகாகோவில் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். நான் ஏற்பாடு செய்கிறேன்’ ராகுல் கூற அதற்கு அவர்கள் ‘ரொம்ப நன்றி’ என்று சொன்னார்கள். இதன்பின், ராகுல்காந்தியுடன் அமர்ந்து காளாண் பிரியாணியை சாப்பிட்டார்கள். அப்போது, சமையல் கலைஞர்கள், ‘‘நீங்கள் இங்கு வந்து நாங்கள் தயாரித்த உணவை சாப்பிடுவீர்கள்... என்ற நம்பிக்கையே இல்லாமல் இருந்தோம். 

இப்போதுகூட நீங்கள் எங்களுடன் இருப்பதை நம்ப முடியாமல் உள்ளது’’ என்று வியப்புடன் கூறினார்கள். இதை கேட்டு ராகுலும் புன்னகைத்தார். ராகுல், சமையல் கலைஞர்கள் உரையாடலை ஜோதிமணி எம்.பி மொழிபெயர்த்தார்.  இதன்பின், காளாண் பிரியாணியை ருசித்து சாப்பிட்ட ராகுல்காந்தி, சமையல் கலைஞர்களை பாராட்டிவிட்டு விடைபெற்றார்.

ஒரு தேசிய தலைவர், முருங்கை தோப்பில், இதமான தென்றல் காற்றில், மண் தரையில் அமர்ந்து சாதாரண தொழிலாளர்களுடன் உணவு சாப்பிட்டது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே,  பிரசாரத்தின்போது, பொதுமக்களிடம் சகஜமாக பேசி பிரசாரம் செய்ததுடன், குழந்தைகளுடன் செல்பி எடுத்தவை எல்லாம் அனைவரையும் கவர்ந்தது. 

தற்போது, சமையல் கலைஞர்களுடன் இணைந்து பச்சடி தயாரித்து, உணவு சாப்பிட்ட வீடியோ, யூ டியூப்பில்  நேற்று முன்தினம் இரவு வெளியானதும்  வைரலானது. இந்த வீடியோ வெளியான 24 மணி நேரத்தில் 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ராகுலின் செயலை பலரும் வரவேற்று பாராட்டி கமெண்ட் போட்டு உள்ளனர்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments