புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 மாதங்களுக்கு பிறகு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்



புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 மாதங்களுக்கு பிறகு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

மக்கள் குறை தீர்க்கும் முகாம்
 
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை, அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்று வந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இருந்து நடைபெறவில்லை. பின்னர் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மாவட்டத்தில் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வந்தது. 

மேலும் கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் மனுக்கள் போடுவதற்காக தனிப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு பிப்ரவரி 1-ந்தேதி முதல் மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்தலாம் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். 

அதன்படி, 10 மாதங்களுக்கு பிறகு மீண்டும் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை10 மணியளவில் கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்ததால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

சமூக இடைவெளி கடைப்பிடிப்பு 

கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்களையும், அவர்கள் கொண்டு வந்த உடைமைகளையும் சோதனை செய்தும், முககவசம் அணிந்து வந்தவர்களை மட்டும் போலீசார் கலெக்டர் அலுவலகத்துக்கு உள்ளே அனுமதித்தனர். மேலும் அவர்களுக்கு கைகளை கழுவ சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது.

 கூட்டத்தில் பொதுமக்களை அதிகாரிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வைத்து, கலெக்டரிடம் மனு அளிக்க செய்தனர். 

185 மனுக்கள் 

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின் படி கோவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு பின் இன்றைய தினம் உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. இன்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து விலையில்லா வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, வங்கி கடன், பசுமைவீடு, சாலைவசதி, குடிநீர்வசதி, முதியோர் உதவித்தொகை, திருநங்கைகளுக்கான வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி 185 மனுக்கள் வரப்பெற்றன. வரப்பெற்ற மனுக்களை தொடர்புடைய அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 25 பேருக்கு ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.42 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments