திண்டுக்கலில் நடைப்பெற்ற ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில பொதுக்குழு



திண்டுக்கலில் நடைப்பெற்ற ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில பொதுக்குழு

பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

தீர்மானம்-01
ஷரீஅத் சட்டங்களின் பாதுகாப்பு

இன்றைய ஃபாசிச சங்பரிவார சக்திகளால் இஸ்லாமிய ஷரீஅத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது; நேரடியாகவே ஷரீஅத் சட்டங்களில் மூக்கை நுழைத்து அதில் மாற்றங்களை ஏற்படுத்திட ஃபாசிசவாதிகள் துணிந்துள்ளனர்; முத்தலாக் தடை சட்டம் அதற்கான முன்னுதாரணமாகும்.

எனவே இஸ்லாமிய சமூகத்தின் அடிப்படையாக திகழும் ஷரீஅத் சட்டங்களை பாதுகாத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதுடன்,உலமாக்கள் இது விஷயத்தில் எவ்வித சமரசமுமின்றி ஃபாசிசத்தை எதிர்த்து நிற்க வேண்டும்.

தீர்மானம்-02
போதை ஒழிப்பு

நம்முடைய எதிர்கால சந்ததிகளின் வாழ்வை கேள்விக்குறியாக்கும் போதைப் பொருட்களுடைய பயன்பாடு பரவலாகியுள்ளது;

முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் நம்முடைய எதிர்கால இளைஞர் சமூகத்தை போதை பழக்கத்திற்கு அடிமையாகாகும் முயற்சிகளில் தீய சக்திகள் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.

உலமாக்கள் இவைகளை அடையாளம் கண்டு நம்முடைய இளைஞர்களை மீட்டெடுப்பதும்,வளர்ப்பு விஷயத்தில் இஸ்லாமிய வழிகாட்டுதல்களை கடைபிடிக்காததன் விளைவுதான் இது என்பதை பெற்றோர்களுக்கு பரிபூரணமாக உணரச் செய்வதும், அதற்கான முறையான வழிகாட்டுதல்களை வழங்குவதும் உலமாக்களின் மிகமுக்கிய பொறுப்பாகும் என்பதை இந்தப் பொதுக்குழு நினைவுபடுத்துகிறது.

தீர்மானம்-03
வக்ஃப் வாரிய சீரமைப்பு 

இஸ்லாமியர்களின் நலன்களுக்காக முஸ்லிம் தனவந்தர்களால் அர்ப்பணிப்பு செய்யப்பட்ட பல்லாயிரம் கோடி மதிப்பிலான அசையும் அசையா வக்ஃப் சொத்துக்களில் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு பல தனி நபர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பிடியில் உள்ளது.

மேலும் வக்பு சொத்துக்களை பராமரிக்க தமிழ்நாடு முழுவதும் மூன்று மாவட்டங்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில் 11 சரகங்கள் செயல்பட்டு வருகின்றன;இதனால் பணிகளில் போதிய முன்னேற்றம் காணப்படவில்லை;எனவே மாவட்டத்திற்கு ஒரு அலுவலகம் அமைக்கப்பட்டு சொத்துக்கள் பாதுகாக்கப்பட ஆவண செய்ய வேண்டும்.

வக்ஃப் சொத்துக்களை முஸ்லிம் சமூகத்தின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் வக்பு வாரியம் மூலமாக பள்ளிக்கூடங்கள், மருத்துவ கல்லூரி,சட்டக் கல்லூரி பொறியியல் கல்லூரி, அரபுக்கல்லூரி ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும்.

வக்ப் வாரியத்தில் நான்கில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஆலிம்கள் ஆக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

தீர்மானம்-04
இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீடு 

இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களின் தொடர் கோரிக்கையாகவுள்ள முஸ்லிம் மக்கள்தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு சதவிகிதத்தை 3.5 லிருந்து ஏழு சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.

தீர்மானம்-05
அரபுக் கல்லூரிகளின் வளர்ச்சி

மார்க்கக் கல்வியின் மையப்புள்ளியாக திகழும் அரபுக் கல்லூரிகளின் வளர்ச்சியும்,மார்க்க கல்வியின் சதவிகிதமும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருக்கும் காலச்சூழலில் வீட்டுக்கொரு ஆலிம் என்ற முழக்கத்தை முன்வைத்து முஸ்லிம் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த உலமாக்கள் பாடுபட வேண்டும்;ஜமாஅத்துடைய அனைத்து நிர்வாகிகளுக்கும் இதன் முக்கியத்துவத்தை உணரச் செய்ய வேண்டும்.

தீர்மானம்-06
மஹல்லா மேம்பாட்டு திட்டம்

தமிழகத்தில் முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் மஹல்லா என அறியப்படும் பல பகுதிகள் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் மிக மோசமான நிலையில் உள்ளன; இதுபோன்ற பகுதிகள் கண்டறியப்பட்டு சுத்தமான குடிநீர், தரமான சாலை வசதிகள்,கழிவுநீர் வடிகாலுக்கான முறையான ஏற்பாடுகள்,ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற செயல் திட்டங்களை பரிபூரணமாக நடைமுறைப்படுத்த ஆவன செய்தல்; இவற்றை நடைமுறைப்படுத்திட மஹல்லா மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் குழு அமைத்து அதற்கான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்பதை மத்திய,மாநில அரசுகளுக்கு இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம்-07
2021 சட்டமன்ற தேர்தல் நிலைபாடு

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பாசிச பா.ஜ.க வை பலமாக எதிர்க்க வேண்டியது கடமையும்,
கட்டாயமும் ஆகும்.இதை கருத்தில் கொண்டு பாசிச பா.ஜ.க வை எதிர்க்கக்கூடிய களத்தில் முன்னணியில் நின்று செயலாற்றுகின்ற தேசிய தளத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி தனித்துவத்துடன் களப்பணியாற்றி வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு நடை பெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி போட்டியிடுகின்ற ஆறு தொகுதிகளில் அதன் வேட்பாளர்களை ஆதரிப்பது என்றும் அவர்களுக்காக பிரச்சாரங்களை மேற்கொள்வதும் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது;
மேலும் தமிழகத்தின் இதர தொகுதிகளில் பா.ஜ.க இடம் பெற்றிருக்கும் அ.தி.மு.க அணியை வீழ்த்துவதற்கான வியூகங்களை வகுத்து தீவிரமாக களப்பணியாற்றிட ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தயாராக உள்ளது; இப்பணியில் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என ஜனநாயக சக்திகளை இப்பொதுகுழு கேட்டுக் கொள்கிறது.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments