புதுக்கோட்டை அருகே கார் மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழப்பு!



புதுக்கோட்டை அருகே கார் மீது லாரி மோதியதில் திருச்சி டாக்டரின் தாயும், தந்தையும் பலியானார்கள். இதில் 5 வயது சிறுவன் காயத்துடன் உயிர்தப்பினான்.

திருச்சி கே.கே.நகர், ஜான்சிநகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 62). இவரது மனைவி சத்தியவாணிமுத்து (58). இவர்கள், பேரன் சூரியபிரகாஷ் (5) என்பவனை அழைத்துக்கொண்டு காரில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் நேற்று மீண்டும் காரில் திருச்சிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். கார் புதுக்கோட்டை அருகே நெடுஞ்சேரி என்ற இடத்தில் வந்தபோது, அந்த வழியாக கல் லோடு ஏற்றி வந்த டிப்பர் லாரி கார் மீது மோதியது.

மோதியவேகத்தில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த செல்வராஜ், அவருடைய மனைவி சத்தியவாணிமுத்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சிறுவன் சூரியபிரகாஷ் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர்தப்பினான்.
விபத்து குறித்து தகவல் அறிந்த வெள்ளனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சூரியபிரகாசை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் குணசேகரன் என்பவரை தேடி வருகின்றனர். விபத்தில் இறந்த செல்வராஜ்-சத்யவாணிமுத்து தம்பதியின் மகனும், மருகளும் திருச்சியில் டாக்டர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments