அன்னவாசல் அருகே 6 மயில்களை கொன்று கடத்திய 2 பேருக்கு வலைவீச்சு: நாட்டு துப்பாக்கி பறிமுதல்!



அன்னவாசல் அருகே 6 மயில்களை கொன்று கடத்திய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர்கள் பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலை ஊராட்சி அண்ணாபண்ணை வளைவு அருகே அன்னவாசல் போலீசார் நேற்று முன்தினம் இரவு ேராந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்த சைகை காட்டினர். ஆனால், அதில் வந்த 2 பேர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் அங்கிருந்து வேகமாக சென்றனர். 

அந்த மோட்டார் சைக்கிளில் 2 சாக்கு மூட்டைகள் இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை விரட்டிச் சென்றனர். போலீசார் பின்தொடர்ந்து வருவதை கண்டதும் சாக்கு மூட்டைகள், ஒரு நாட்டுத்துப்பாக்கி ஆகியவற்றை அங்கேயே போட்டு விட்டு 2 பேரும் தப்பி சென்று விட்டனர். பின்னர், அந்த மூட்டைகளை போலீசார் பிரித்து பார்த்தபோது அதில் இறந்த நிலையில் 6 மயில்கள் இருந்தன.

இதனையடுத்து இறந்த மயில்கள் மற்றும் நாட்டுத்துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையம் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின்பேரில் போலீஸ் நிலையம் வந்த மாவட்ட வனத்துறை அலுவலர் சமீர் அஹமதுவிடம் இறந்த 6 மயில்களும் ஒப்படைக்கப்பட்டன. மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றவர்கள் மயில்களை நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொன்று ஏதோ காரணத்துக்காக கடத்தி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தப்பி சென்றவர்களை போலீசார் மற்றும் வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments