45 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!



பக்கவிளைவுகள் ஏதும் இல்லை. 45 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் உமாமகேஸ்வரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் கைத்தறி, துணிநூல் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். 

கூட்டத்திற்கு பின் அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை முற்றிலுமாக தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்காக ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட
1,500-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளதுடன், தேவையான மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது.

கொரோனா தடுப்பூசிகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. 45 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு நேரடியாக சென்று தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும். பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கொரோனா தடுப்பு வழிமுறைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்படுவதுடன், முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், திரையரங்குகள், கடைகள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முக கவசம் அணிதல் போன்றவற்றை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இதனை மீறும் கடையின் உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து மீறும் நிறுவனங்களை சீல் வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கொரோனா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானதாகும். எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. தடுப்பூசி குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள தொலைபேசி எண் அறிவிக்கப்படும். பொதுமக்கள் அந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு வர வாய்ப்பு இல்லை. அரிதாக அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் உயிருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. முக கவசம் அணியாமல் இருத்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறை மீறல்கள் தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை ஆகியவற்றின் மூலம் மாவட்டத்தில் இதுவரை ரூ.10 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒரே இடத்தில் மூன்று நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதிகள் இதுவரை ஏதுமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, பொது சுகாதார துணை இயக்குனர்கள் கலைவாணி, விஜயக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments