கோபாலப்பட்டிணம் மக்கா தெரு 1-வது வீதியில் வடிகால் வாய்க்காலை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை!!



கோபாலப்பட்டிணம் மக்கா தெரு 1-வது வீதியில் வடிகால் வாய்க்காலை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகாமையில் உள்ள  கோபாலப்பட்டிணம் மக்கா தெரு 1-வது வீதியில் (பெரிய பள்ளி-கடற்கரை சாலை) வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாய்க்காலானது முண்டு கல்லில் சிமெண்ட் கொண்டு கட்டப்பட்டிருந்தது. அந்தக் கால்வாயானது அன்றய காலகட்டத்தில் திறந்த நிலையில் காணப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அந்த கால்வாயை நாளடைவில் தண்ணீர் செல்ல முடியாத நிலையில் மூடினர். இதன் காரணமாக சில மாதங்களுக்கு முன் பெய்த கனமழையால் அந்த பகுதியில் உள்ள ஒரு தெருவில் இருந்து மழைநீர் வெளியேற முடியாமல் வீட்டிற்குள் சூழ்ந்தது. இதனால் அந்த மழைநீரை வெளியேற்ற ஊராட்சி மன்ற நிர்வாகம் தற்காலிக நடவடிக்கையாக அந்த பகுதியில் அடைபட்டிருந்த வாய்க்காலை JCB இயந்திரம் மூலம் அகற்றி மழைநீரை வெளியேற்றினர். 

அந்த பகுதியில் இருந்த வாய்க்கால் அகற்றப்பட்டதால் சாலையின் ஓரத்தில் பெரிய பள்ளம் உருவானது. இதனால் அந்த பகுதியில் உள்ள வயதானோர் மற்றும் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை உருவாகியுள்ளது. வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தை வெளியே இறக்கும் போது பள்ளத்தில் விழுந்து காயமடைவதும், இருசக்கர வாகனங்கள் பழுதடைவதும் வாடிக்கையாக உள்ளது. மேலும் அந்த பகுதியில் கார் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் சென்றால் எதிரே இன்னொரு கார் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் பைக்கில் செல்வோர் வடிகால் இருப்பதை அறியாமல் விழுந்து விபத்துக் குள்ளாவதும் தொடர்கதையாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் அப்பகுதியில்  வசிக்கும் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

தொடர்ந்து  சில மாதங்களாக இதே நிலை நீடிப்பதாகவும், இதற்கு எப்போது விடிவு காலம் பிறக்கும் என்று கேள்வி எழுப்புகின்றனர் அப்பகுதி மக்கள்.

ஊராட்சி நிர்வாகம் சார்பாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தூம்பு அமைப்பதற்கு அந்த பகுதியில் சிமெண்ட் பைப்புகள் இறக்கி வைக்கப்பட்டு இதுவரை வேலை நடைபெறாமல் உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தூம்பு அமைத்து சரி செய்து தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அப்பகுதியில் ஒவ்வொரு வீட்டு வாசல்களில் மட்டும் தூம்பு அமைக்காமல் அந்த பகுதி முழுவதும் தூம்பு அமைத்து மழைநீர் வெளியேற நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




கடந்த 19.01.2021 அன்று அப்பகுதி மக்கள் வடிகால் வாய்க்காலை சீரமைக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments