புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு போதுமான ஆக்சிஜன் இருப்பு: கலெக்டர் தகவல்!



புதுக்கோட்டை நகராட்சி, சந்தைப்பேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் பிளஸ்-2 செய்முறை தேர்வினை கலெக்டர் உமாமகேஸ்வரி நேற்று ஆய்வு மேற்கொண்டார். 

அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாவட்டத்தில் உள்ள 123 பள்ளிகளில் இரண்டு கட்டங்களாக செய்முறைத் தேர்வுகள் நடைபெறுவதுடன், இதில் 13,018 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். ஆசிரியர் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய கொரோனா தடுப்பு விதிமுறைகளின் படி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 

மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் முககவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவற்றை தவறாது பின்பற்ற வேண்டும்.

கொரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் ஆக்சிஜன் வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டே கூடுதலாக ஆக்சிஜன் சிலிண்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறுநீரக ஒப்புயர்வு மையத்தை முழுவதுமாக கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இங்கு 6 கே.எல். டேங்க் அமைக்கப்பட்டிருந்ததுடன், தற்பொழுது கூடுதலாக ஒரு 6 கே.எல். டேங்க் அமைக்கப்பட்டு மொத்தம் 12 கே.எல். டேங்க் அமைக்கப்பட்டு, அதில் ஆக்சிஜன் நிரப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டு, தேவையான அளவு ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு கொரோனா பாதிப்பு விகிதம் 1.6 சதவீதத்தில் இருந்தது. தற்பொழுது கொரோனா பாதிப்பு விகிதம் 3 சதவீதம் அளவில் உள்ளது. ஏற்கனவே தினமும் 1,000 முதல் 1,500 எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்பொழுது கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை புதுக்கோட்டை நகரில் இயங்கும் தனியார் வணிக வளாகங்களில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன், வட்டாட்சியர் முருகப்பன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments