மணமேல்குடி அருகே சோகம்: கிரிக்கெட் விளையாடிய வாலிபர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு



புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மணமேல்குடி தாலுகா, அம்மாபட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலிம்ஷாவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி. இவரது மகன் சுமன் (வயது 23). கொத்தனார் வேலை செய்து வந்த இவர், நேற்று தப்பத்தான்வயல் கிராமத்தில் உள்ள வயல்வெளி மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.

மின்சாரம் பாய்ந்தது
விளையாட்டின் போது சுமன் பந்தைப் பிடிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த மின்கம்பியில் இருந்து தாழ்வாகச் சென்ற மின்சாரக் கம்பி எதிர்பாராத விதமாக அவரது கையில் பட்டது. இதில் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து சுமன் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

வாலிபர் உயிரிழப்பு
இதைப் பார்த்த அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் மற்றும் பொதுமக்கள், அவரை மீட்டு உடனடியாக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சுமன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் தண்டலை பாலு கொடுத்த புகாரின் பேரில், மணமேல்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments