மே 2ஆம் தேதி தேர்தல் கொண்டாட்டத்துக்குத் தடை: தேர்தல் ஆணையத்தின் உத்தரவு என்ன சொல்கிறது?- முழு விவரம்






கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தேர்தல் நடந்து முடிந்த 5 மாநிலங்களிலும் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்தபின் தேர்தல் கொண்டாட்டங்கள் நடத்தத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 3.23 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர், 2,771 பேர் உயிரிழந்தனர்.

கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் நேரத்திலும் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் 7 கட்டத் தேர்தல் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 8-வது கட்டம் மட்டும் நடக்க உள்ளது. இதற்கிடையே தேர்தல் நேரத்திலும், பிரச்சாரத்திலும் கரோனா தடுப்பு விதிகளைத் தேர்தல் ஆணையம் முறையாகக் கடைப்பிடிக்கவில்லை, தீவிரமாக அமல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

சென்னை உயர் நீதிமன்றம் நேற்று ஒரு வழக்கில் கருத்து தெரிவித்தபோது, “ தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையின் தற்போதைய நிலைக்குத் தேர்தல் ஆணையம்தான் காரணம். அந்தக் குற்றச்சாட்டைத் தவிர்க்க முடியாது.

கடந்த சில மாதங்களாகவே பொறுப்பற்ற முறையில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வந்ததாகவும், கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காகவும் தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தினாலும் தவறில்லை” என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்து, தேர்தல் ஆணையம் இன்று புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்குத் தேர்தல் முடிந்து வரும் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வரும் நேரத்தில் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பின் அரசியல் கட்சிகள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடக்கூடும். அப்போது போலீஸார் குவிக்கப்பட்டாலும் கட்டுப்படுத்துவது எளிதான காரியமாக இருக்காது.

ஆதலால், தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே, மே 2-ம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை முடிந்து அரசியல் கட்சிகள் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்குத் தடை விதித்து தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

“நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தேர்தல் நடந்து முடிந்த 5 மாநிலங்களில் வரும் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது கடுமையான விதிகளைப் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி வாக்கு எண்ணிக்கை முடிந்தபின், அரசியல் கட்சிகள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடக் கூடாது. அதற்கு அனுமதியில்லை. இதற்கான உத்தரவை அனைத்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் வெற்றி பெற்ற அரசியல் கட்சியின் வேட்பாளர் அதிகாரியிடம் வெற்றிச் சான்றிதழைப் பெறும்போது, வேட்பாளருடன் 2 நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும். அந்த 2 நபர்களும் வேட்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதகளாக இருக்க வேண்டும்”.

இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments