புதுக்கோட்டை டாம்ப்காலில் தயாராகும் கபசுர, நிலவேம்பு சூரணம்; பிற மாவட்டங்களுக்கு விநியோகம்



புதுக்கோட்டையில் தொடங்கப்பட்ட டாம்ப்கால் அரசு நிறுவனத்தின் 2-வது உற்பத்தி பிரிவில் இருந்து முதல்கட்டமாக கபசுர மற்றும் நிலவேம்பு சூரணம் தயாரிக்கப்பட்டு, பிற மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் நிறுவனமான தமிழ்நாடு மருத்துவத் தாவர பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துகள் கழகம் (டாம்ப்கால்) சென்னையில் இயங்கி வருகிறது.

இக்கழகத்தின் மூலம் சித்த மருந்துகளைக் கொண்டு ஹேர் ஆயில், பல்பொடி, டானிக், சூரணம், மூலிகைப் பவுடர், லேகியம், மருந்து மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்படுகின்றன.

இதன் 2-வது உற்பத்திப் பிரிவு புதுக்கோட்டை முத்துலெட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

இங்கு, முதல் கட்டமாக கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் தயாரிப்புக்கான சூரணம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இவை, தமிழகத்தில் புதுக்கோட்டை உட்பட 19 மாவட்டங்களில் அரசின் தேவைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையத்தை  (ஏப்.16) ஆய்வு செய்த ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி கூறியதாவது:

"தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக புதுக்கோட்டையில் டாம்ப்கால் மருந்து உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையத்தில் தினந்தோறும் 450 கிலோ வீதம் கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீருக்கான சூரணம் தயாரிக்கப்பட்டு, புதுக்கோட்டை உள்ளிட்ட 19 தென்மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையத்தில், 7,000 கிலோ நிலவேம்பு, 3,000 கிலோ கபசுர குடிநீருக்கான சூரணம் தயார் நிலையில் உள்ளது.

எனவே, பொதுமக்கள் அரசால் தெரிவிக்கப்படும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட சுகாதார இணை இயக்குநர் ராமு, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உம்மல் கதீஜா, கோட்டாட்சியர் டெய்சிகுமார், சுகாதார துணை இயக்குநர் கலைவாணி, டாம்ப்கால் சிறப்பு அலுவலர் மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments