1 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம்






1 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம்.
   
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கிட்டத்தட்ட 20 பேருக்கு முதல் டோஸாக கோவிஷீல்டையும் 2 வது டோஸாக கோவாக்சினையும் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவில் இருந்து 270 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு வசிக்கும் கிராமவாசிகளுக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் முதல் டோஸாக கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், மே 14 ஆம் தேதி 2 வது டோஸாக கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து சித்தார்த் நகர் தலைமை மருத்துவ அதிகாரி சந்தீப் கூறும் போது, “இது முழுக்க முழுக்க அலட்சியத்தால் நிகழ்ந்திருக்கிறது. இவ்வாறு செயலாற்ற அரசு தரப்பில் இருந்து எந்த உத்தரவும் வழங்கவில்லை. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை எங்களது குழு தொடர்ந்து தொடர்பு கொண்டு பேசி வருகிறது. அவர்கள் நலமாக உள்ளனர்” என்றார்.

தடுப்பூசிகளை எடுத்துக்கொண்ட கிராமவாசி ராம் சுரத் கூறும் போது, “ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் டோஸாக கோவிஷீல்டை எடுத்துக்கொண்ட நான் மே 14 ஆம் தேதி 2 வது டோஸாக கோவாக்சினை எடுத்துக்கொண்டேன். யாரும் அதனை சரிபார்க்க வில்லை. பயமாக இருக்கிறது.. இது கவலையளிப்பதாக இருக்கிறது. இதுவரை யாரும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை” என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments