முதல் தவணை ரூ.2 ஆயிரம் பெற விரல்ரேகை அவசியமில்லை: அந்தந்த ரேஷன் கடைகளுக்கு சென்று பணத்தை பெற்றுக்கொள்ளலாம்





    
கொரோனா பாதிப்புக்கான முதல் தவணை ரூ.2 ஆயிரம் பெற விரல்ரேகை அவசியமில்லை என்றும், அந்தந்த ரேஷன் கடைகளுக்கு சென்று பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 2 கோடியே 7 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முதல் தவணை கொரோனா நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்திருக்கிறார்.

இந்த பணியை கூட்டுறவுத்துறையில் இருக்கிற ரேஷன் கடைகள் மேற்கொள்ள இருக்கின்றன. வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) அந்த நிவாரண தொகையை அந்தந்த மாவட்டங்களில் வழங்கும் பணி சம்பந்தமாகவும், துறையின் அதிகாரிகள், இணை-துணை பதிவாளர்கள் அனைவரும் இப்பணியை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்த ஆய்வு கூட்டம் நடந்தது.

கூட்டுறவுத்துறையின் மூலம் 15-ந் தேதி முதல் இந்த பணியை சிறப்பாக மேற்கொள்ள அரசு அதிகாரிகளுக்கு உரிய ஆணை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த பணியை 100 சதவீதம் சிறப்பாக கூட்டுறவுத்துறை செய்து முடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காலக்கெடு இல்லை

அதைத்தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ரேஷன் கடைகளில் நிவாரணத்தொகை வழங்கும் பணிகளை அதிகாரிகள் குழு கண்காணிக்குமா?

பதில்:- தமிழகம் முழுக்க அனைத்து பகுதிகளிலும் இருக்கும் அதிகாரிகள், தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ரேஷன் கடைகளுக்கு சென்று நிவாரணத்தொகை வினியோகம் செய்யும் பணியை கண்காணிப்பார்கள். இதற்காக அதிகாரிகள் குழுக்களும் நியமிக்கப்பட்டிருக்கிறது.

கேள்வி:- எத்தனை நாட்களில் இந்த பணி முடிவடையும்?

பதில்:- ஒரு ரேஷன் கடையில் தினந்தோறும் 200 பேருக்கு நிவாரணத்தொகை வழங்கப்படும். இதற்கு காலக்கெடு இல்லை. ரேஷன் கடைக்குட்பட்ட பயனாளிகள் அனைவருக்கும் முழுமையாக நிவாரணத்தொகை சேர்க்கப்படும்.

வேறு மாவட்டத்தில் இருந்தால்...

கேள்வி:- ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ எனும் மத்திய அரசின் திட்டத்தின் மூலம், தமிழகத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பயனாளிகள் நிவாரணத்தொகையை பெற்றுக்கொள்ள முடியுமா?

பதில்:- ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை மாநிலம் முழுவதும் பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தலாம். நிவாரணத்தொகையை அந்தந்த ரேஷன் கடைகளில் மட்டுமே பெறமுடியும்.

கேள்வி:- தொழில் நிமித்தமாக பலர் வேறு மாவட்டங்களில் இருக்கிறார்கள். முழு ஊரடங்கில் போக்குவரத்து இல்லாத சூழலில் ரேஷன் கடைகளுக்கு இந்த தொகையைப் பெற பயனாளிகள் அனைவருமே வர இயலுமா?

பதில்:- ஊரடங்கு காலத்தில் 99 சதவீத மக்கள் அந்தந்த பகுதிகளில்தான் இருப்பார்கள். எனவே ரேஷன் கடைகள் மூலம் அவர்கள் எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.

பயோ-மெட்ரிக் முறை இல்லை

கேள்வி:- ரேஷன் கடைகளில் நிவாரணத்தொகை வழங்கும் காலத்தில் அத்தியாவசிய பொருட்களை பயனாளிகள் வாங்கலாமா?

பதில்:- அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதில் பிரச்சினை இல்லை. அதற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை.

கேள்வி:- நிவாரணத்தொகையைப் பெறுவதற்கு, விரல்ரேகையை பதிவு செய்யும் பயோ-மெட்ரிக் முறை பின்பற்றப்படுமா?

பதில்:- பயோ-மெட்ரிக் முறை இதில் பின்பற்றப்படாது. ரேஷன் அட்டையில் பெயர் இடம்பெற்றவர்கள் யார் வேண்டுமானாலும் வந்து நிவாரணத்தொகையை வாங்கிக்கொள்ளலாம்.

இவ்வாறு அமைச்சர் ஐ.பெரியசாமி பதில் அளித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments