`நம் முதல் எதிரியே பய உணர்வுதான்`- கொரோனா கால மனஅழுத்த சிக்கலும் மருத்துவரின் விளக்கமும்!



 இந்தியாவை மூச்சுத்திணற செய்துள்ளது பேராட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலை. 


நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கொரோனா வைரஸ் குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸை விட அது குறித்த செய்திகளை பார்த்து மக்கள் அரண்டு நிற்கின்ற வேளையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாட்டு மக்களை வெகுவாக பதற்றமடைய செய்துள்ளதோடு மன அழுத்தத்திற்கும் ஆட்படுத்துவதாக சில ஆராய்ச்சி முடிவுகளில் சொல்லப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தாக்கத்தின் பாதிப்புக்குள்ளாகி உள்ள நம் நாடு செய்வதறியாத கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சில திடீர் கெடுபிடிகள் மன சிதறல்களை மக்களிடையே ஏற்படுத்தும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள். 

இது தொடர்பாக மனநல மருத்துவர் சுனில் குமார் விஜயனிடம் கூறியாதவது

 “இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் தீவிரம் அதிகரித்துள்ள வேளையில் ‘அடுத்து யாரை தாக்கும்?’ என்ற பதற்றமும், பயமும் ஒவ்வொருவருக்குள்ளும் நிச்சயம் இருக்கும். மனிதனின் முதல் எதிரியே பய உணர்வு தான். இந்த பயமே மன சிதறல்களை ஏற்படுத்த காரணமாக அமைந்துவிடும். 

சந்தேகப்படுவது, கோபம் கொள்வது, மன அமைதியை இழப்பது என வெவ்வேறு விதமான உளவியல் மாற்றங்களை ஒருவருக்கு பயம் ஏற்படுத்தும். இதனால் மன அழுத்தம் உண்டாகும். கொரோனா வைரஸ் விவகாரத்தில் நாம் ஒவ்வொருவரும் அது குறித்த சரியான தகவல்களை கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

கொரோனா வைரஸ் பாதிப்பு எப்படி ஏற்படுகிறது, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தொற்று பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தால் மருத்துவமனையை அணுகி பரிசோதித்து கொள்ளலாம்.
 
நம்மை விழிப்போடு வைத்துக்கொள்ள தான் அது சம்பந்தமான செய்திகள் வெளியாகி வருகின்றன. இருந்தாலும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மாதிரியான சமூக வலைத்தளங்களிலும், செய்திகளிலும் வெளியாகின்ற கொரோனா வைரஸ் குறித்த செய்திகளை எந்நேரமும் தொடர்ச்சியாக பார்த்து கொண்டே இருப்பது பதற்றத்தை அதிகரிக்க செய்து மன வலிமையை இழக்கச் செய்துவிடும். இந்த மாதிரியான தவிர்க்க முடியாத சூழலில் மனதை கொஞ்சம்  திடப்படுத்திக் கொண்டு அதை எதிர்கொள்ள வேண்டும். கூடுமான வரையில் கொரோனா குறித்த செய்திகளை அதிகம் பார்ப்பதை தவிர்த்து, வேறு வேலைகளில் நாட்டம் செலுத்துவது இதற்கு ஒரு தீர்வாக இருக்கும். 

புத்தகம் படிப்பதில் ஆரம்பித்து அவரவருக்கு பிடித்த வேலைகளை வீட்டிலிருந்தபடியே செய்யலாம். ஆனால் எதை செய்தாலும் விழிப்போடு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்” என்கிறார் அவர். 

கோவிட் நெருக்கடி இலவச மனநல ஆலோசனை சேவைக்கு 94440 20006 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments