புதுக்கோட்டையில் கொரோனா வார்டில் இருதய நோயாளிக்கு சிகிச்சை அளித்த எம்.எல்.ஏ.



புதுக்கோட்டையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு திடீரென இருதய கோளாறு ஏற்பட்டதால் எம்.எல்.ஏ. பாதுகாப்பு கவச உடை அணிந்து சிகிச்சை அளித்தார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் 600-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான டாக்டர் முத்துராஜா நேற்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

அப்போது கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு திடீரென்று இருதயகோளாறு ஏற்பட்டது. தகவலறிந்த முத்துராஜா எம்.எல்.ஏ. உடனடியாக பாதுகாப்பு கவச உடை அணிந்து உள்ளே சென்று நோயாளிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் மருத்துவர்களிடம் மேல்சிகிச்சை முறை குறித்து அறிவுறுத்தினார்.

எம்.எல்.ஏ. முத்துராஜா டாக்டர் என்பதால் அவர் உடனடியாக சிகிச்சை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நோயாளிக்கு எம்.எல்.ஏ. சிகிச்சை அளித்தது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது. இதற்கிடையில் கொரோனா வார்டில் சிகிச்சை பணிக்காக 12 செவிலியர்களை நியமித்து தனது சொந்த செலவில் சம்பளம் வழங்க எம்.எல்.ஏ. முத்துராஜா நடவடிக்கை எடுத்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments