பிளஸ் 2 தேர்வை ரத்து செய்தது ஏன்? மதிப்பெண் கணக்கீடு எப்படி?- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி



பொதுத் தேர்வை ரத்து செய்தது ஏன் என்பது குறித்தும், பிளஸ் 2 மதிப்பெண்கள் எப்படிக் கணக்கிடப்படும் என்பது குறித்தும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், குஜராத், ம.பி. உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களிலும் 12-ம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே தமிழகத்தில் மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் தேர்வு ரத்து குறித்தும், பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு பற்றியும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி:

''முன்னதாகக் கல்வியாளர்கள், தேர்வுத் துறை சார்ந்த அதிகாரிகளுடன் பேசும்போது பொதுத் தேர்வைக் கட்டாயம் நடத்தியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அதற்கு வினாத்தாள் உள்ளிட்ட அனைத்துவிதமான முன்னேற்பாடுகளும் தயாராக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தோம். பெரும்பாலானோரின் கருத்துகளும் தேர்வை நடத்துவதற்கு ஆதரவாக இருந்தாலும் மருத்துவக் குழுவின் ஆலோசனைகளை முக்கியமாகப் பார்த்தோம்.

ஏனெனில் ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் ஊரடங்கு விதிக்கும்போது மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைக் கேட்டு முடிவெடுக்கிறோம். அந்த அடிப்படையில் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை அடுத்து பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

12-ம் வகுப்பு மாணவர்களுக்குக் காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, யூனிட் தேர்வுகள் என எந்தத் தேர்வுகளும் நடைபெறாத சூழலில் எந்த அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்படும் என்று கேள்வி எழுப்பியுள்ளீர்கள். பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், உயர் கல்வித்துறைச் செயலாளர், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்களின் பிரதிநிதி ஆகியோரை வைத்து ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழு அமைக்கப்பட்ட உடன் விரைவாக மதிப்பெண்களை மதிப்பிடும் பணிகள் தொடங்கும். இதுகுறித்து முதல்வரும் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

ஏற்கெனவே இரண்டு வாரங்களுக்குள் சிபிஎஸ்இ மாணவர்களின் மதிப்பெண்களைக் கணக்கிடுவது குறித்து மத்திய அரசு அறிவிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஐசிஎஸ்இ 4 வாரங்கள் கேட்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இரண்டு வாரங்கள் மட்டுமே அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில் இரண்டு வாரங்களுக்குள் தமிழகத்திலும் மதிப்பெண்கள் கணக்கிடும் பணி முடிவடையும். சிபிஎஸ்இ மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பதையும் கவனத்தில் கொண்டு முடிவெடுக்க உள்ளோம். குறிப்பாக மாணவர்களின் முந்தைய செயல்பாடுகள் கணக்கில் கொள்ளப்படும். ஏனெனில் மற்ற எந்தத் தேர்வுகளும் நடக்காத நிலையில், மதிப்பீடு செய்ய வேறு எந்த வாய்ப்பும் இல்லை.

மாணவர்களின் 10-ம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்களை எடுக்கப் போகிறோமோ, 9-ம் வகுப்பு மதிப்பெண்கள் அல்லது அவற்றில் அவர்கள் வாங்கி அதிகபட்ச மதிப்பெண்களை மட்டும் எடுக்கப் போகிறோமோ என்பது குறித்த ஆலோசனைகளையும் பெற்று வருகிறோம். விரைவில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு அறிவிக்கப்படும்''.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments