தமிழ்நாட்டில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தன



தமிழகத்தில், முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு அறிவித்த சில தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்தன.

தமிழகத்தில் ஜூன் 14ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அனைத்து மாவட்டங்களுக்குமான தளர்வுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
 
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ள போதிலும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் மட்டும் நோய் தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாக இருப்பதால் சில அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதே தளர்வுகள் கொரோனா பாதிப்பு குறைந்த சென்னை உட்பட மற்ற 27 மாவட்டங்களுக்கும் பொருந்தும்.
 
அதன்படி தனியாக செயல்படுகின்ற காய்கறிகள், மளிகை, பலசரக்குகள், விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். மீன் சந்தைகள் மற்றும் இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தனி மனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மீன் சந்தைகளை ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வகங்கள் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவிகித பணியாளர்களுடன் செயல்படலாம் என்றும் சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு பத்திரபதிவுகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவிகித பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
தொற்று குறைவாக உள்ள சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் தளர்வுகளும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
 
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில், சென்னை, அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மதுரை, பெரம்பலூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, சிவகங்கை தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருப்பத்தூர் திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக உள்ளதால் இம்மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன.
 
அதன்படி, ஹார்டுவேர் கடைகள், பாட புத்தக விற்பனை நிலையங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்கும் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. எலெக்ட்ரீசியன்கள், ப்ளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரப் பழுது நீக்குபவர்கள், தச்சுத் தொழிலாளர்கள் போன்ற சுய தொழில் செய்வோர் இ பதிவு அனுமதியுடன் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை பணியாற்றலாம். மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடைகள், வாகன உதிரிபாகங்கள் விற்பனை நிலையங்கள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
கொரோனா அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் ஆட்டோக்கள், டாக்சிகளில் இ-பதிவுடன் பயணிக்கலாம். தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளில் ஈடுபடுவோர் இ-பதிவுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இ-பதிவு கட்டாயம்:

மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

ரெயில், விமான நிலையங்களுக்கு வீட்டில் இருந்து செல்லும் போதும், அங்கிருந்து வீட்டிற்கு வரும்போதும், பயணத்திற்காக செய்யப்பட்ட இ-பதிவு விவரங்கள், பயணச்சீட்டு, அடையாள சான்று ஆகியவை இருந்தால்தான் அனுமதி கிடைக்கும்.

மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் தனியொருவர் செல்ல வேண்டும் என்றால், மருத்துவ அவசர காரியங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கு மட்டும் இ-பதிவுடன் செல்லலாம். மாவட்டத்திற்கு உள்ளே மருத்துவ அவசர காரியங்கள், இறுதிச் சடங்குகளுக்கு இ-பதிவு இல்லாமல் செல்லலாம் என்று தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறி உள்ளார்.

தொடர்ந்து இயங்கும் தொழிற்சாலைகள், அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்கலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments