கோபாலப்பட்டிணத்தில் இருந்து அறந்தாங்கிக்கு பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுத்த அறந்தாங்கி சட்ட மன்ற உறுப்பினர்!! குவியும் பாராட்டு!!!




கோபாலப்பட்டிணத்தில் இருந்து அறந்தாங்கிக்கு சட்ட மன்ற உறுப்பினர் ST.ராமசந்திரன் அவர்களின் உடனடி நடவடிக்கையால் மீண்டும் டவுன் பஸ் இயக்கப்பட்டது.

அறந்தாங்கி பஸ் நிலையத்தில் இருந்து மீமிசல் வழியாக கோபாலப்பட்டிணத்திற்கு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. கோபாலப்பட்டிணத்தில் இருந்து தடம் எண்.12 மற்றும் தடம் எண்.14 என்ற இரண்டு பேருந்துகள் அதிகாலை 4.30 மணிக்கும், காலை 10.15 மணிக்கும், இரவு 8.30 மணிக்கும் அறந்தாங்கிக்கு இயக்கப்பட்டு வந்தது. அதே போல் அறந்தாங்கியில் இருந்து இரவு 10.30 மணிக்கு கோபாலப்பட்டிணம் வந்தடையும்.

இந்த பேருந்து கோபாலப்பட்டிணத்தில் இருந்து வெளியூர்களுக்கு தினமும் வேலைக்கு சென்று வருபவர்களுக்கும்,ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகம், மருத்துவ மனைகளுக்கும், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கும் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியூர் சென்று வர பயனுள்ளதாக இருந்து வந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கினால் நிறுத்தப்பட்ட இந்த டவுன் பஸ், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் இயக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் 16.07.2021 வெள்ளிக்கிழமை கோபாலப்பட்டிணத்தில் அறந்தாங்கி சட்டமன்ற தலைவர் ST.ராமசந்திரன் தலைமையில் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அவுலியா நகரை சேர்ந்த முஹம்மது ரியாஸ் தலைமையில் இளைஞர்கள் சேர்ந்து கோபாலப்பட்டிணத்திற்கு இயக்கப்பட்டு வந்த பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.





மனுவை பெற்று கொண்ட சட்ட மன்ற உறுப்பினர் ST.ராமசந்திரன் அவர்கள் உடனடியாக அறந்தாங்கி அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு  நாளை 17.07.2021 (நேற்று) நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் நேற்று 17.07.2021 அதிகாலை 4.30 மணியளவிலும் மற்றும் காலை 10.15 மணியளவிலும் இரண்டு நேரங்கள் அறந்தாங்கியில் இருந்து பேருந்து இயக்கப்பட்டது. மேலும் காலை 10.15 மணியளவில் வந்த பேருந்தில் அரசு போக்குவரத்து கழக அதிகாரி வருகை புரிந்து இனிமேல் தினமும் இப்பேருந்து இயக்கப்படும் என்று பொதுமக்களிடம் தெரிவித்தார்.

இதனால் பொதுமக்கள் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பேருந்து இயங்க ஆரம்பத்தில் இருந்து  முயற்சி செய்து பல கட்ட நடவடிக்கை மேற்கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியை
சேர்ந்த  கோபாலப்பட்டிணம் அமிர் அவர்களுக்கு ,பேருந்து இயக்க மனு அளித்த இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், நடவடிக்கை எடுத்த அறந்தாங்கி சட்ட மன்ற உறுப்பினர் ST.ராமசந்திரன் மற்றும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments