கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட கோபாலப்பட்டிணம் - அறந்தாங்கி அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க பொதுமக்கள் கோரிக்கை!



கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது நிறுத்தப்பட்ட அறந்தாங்கியில் இருந்து மீமிசல் வழியாக கோபாலப்பட்டிணம் வரும் அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அறந்தாங்கியில் இருந்து மீமிசல் வழியாக கோபாலப்பட்டிணத்திற்கு ஒரு அரசு பேருந்து தினம்தோறும் 3 முறை வந்து சென்றது. கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு இந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று குறைந்த பிறகும் அந்த பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கவில்லை. 

இதனால் பொதுமக்கள் ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகம், அறந்தாங்கி மருத்துவமனைக்கும் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியூர் சென்று வர பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கோபாலப்பட்டிணம் அமீர் கூறியதாவது: கொரோனா தாக்கத்தால் அரசு ஊரடங்கை அறிவித்து அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டது. அதன் பின்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் அறந்தாங்கியில் இருந்து மீமிசல் வழியாக கோபாலப்பட்டிணத்திற்கு வந்து சென்ற பேருந்து நேற்று வரை இயக்கப்படவில்லை. இந்த பேருந்து இரவு நேரத்தில் அறந்தாங்கி செல்வதற்கு வசதியாக இருந்தது. 

இந்த பேருந்து இயங்காததால் மீமிசல், அறந்தாங்கி, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல 2 கிலோ மீட்டர் அப்பால் உள்ள மீமிசலுக்கு சென்று பஸ் ஏற வேண்டியுள்ளது.அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தற்போது பெண்கள் நகர பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்பதால் பெண்களுக்கு இப்பேருந்து மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த பேருந்து மீண்டும் இயக்க வேண்டுமென அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினரிடம் பொதுமக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி இப்பேருந்தை காலை, மதியம், மாலை மற்றும் இரவு ஆகிய நேரங்களில் இயக்க அறந்தாங்கி சட்ட மன்ற உறுப்பினர், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீண்டும் பேருந்தை இயக்க வேண்டும் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments