புதுக்கோட்டை அருகே துணிப்பையில் வீசப்பட்ட பிறந்து சில மணி நேரங்களேயான குழந்தை பத்திரமாக மீட்பு





புதுக்கோட்டை: துணிப்பையில் வீசப்பட்ட பிறந்து சில மணி நேரங்களேயான குழந்தை பத்திரமாக மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பேருந்து நிறுத்தத்தில் துணிப்பையில் சுற்றப்பட்டு கிடந்த பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை அப்பகுதி இளைஞர்கள் மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். இந்த நிலையில், தற்போது அந்த குழந்தை வருவாய்த் துறையினர் மூலம் சைல்டு லைன் அமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழந்தை இப்படி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதி கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நேற்று மாலை பச்சிளம் குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டுள்ளது. குழந்தையின் சத்தத்தைக் கேட்டு அப்பகுதி இளைஞர்கள் அங்கு சென்று பார்த்தபோது பிறந்த சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று துணிப்பையில் சுற்றப்பட்டு கிடந்துள்ளது.





இதனையடுத்து அந்தக் குழந்தையை மீட்ட அப்பகுதி இளைஞர்கள் உடனடியாக கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துவிட்டு இதுகுறித்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு வந்த கறம்பக்குடி வட்டாட்சியர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டதோடு சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் ஆம்புலன்ஸ் உடன் அங்கு வந்த சைல்டு லைன் அமைப்பினர் உடனடியாக பச்சிளம் குழந்தையை வருவாய்த்துறையினரிடம் இருந்து மீட்டு புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள பச்சிளம் குழந்தை வார்டில் வெண்டிலேட்டர் வசதியுடன் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட திட்டமிடப்பட்டு, தரப்பட்டு வருகிறது.

இதனிடையே குழந்தையை வீசி சென்ற நபர்கள் யாரென்று தெரியாததால் இதுகுறித்து பிலாவிடுதி வி.ஏ.ஓ. தீபிகா அளித்த புகாரின் அடிப்படையில் கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை பேருந்து நிறுத்தத்தில் வீசி சென்ற நபர்கள் யார், பெற்றோர்கள் வீசினார்களா அல்லது வேறு யாரும் வீசினார்களா, என்ன காரணத்துக்காக குழந்தை வீசப்பட்டது என பல கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments