கீரமங்கலத்தில் குளத்தில் குளிக்க சென்ற 2 தொழிலாளிகள் மின்சாரம் பாய்ந்து பரிதமாக உயிரிழப்பு



கீரமங்கலத்தில் குளத்தில் குளிக்க சென்ற 2 தொழிலாளிகள் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் குமாரவேல் (வயது 45). சுமை தூக்கும் தொழிலாளி. நேற்று மதியம் லாரியில் வந்த மூட்டைகளை இறக்கிவிட்டு வழக்கமாக குளிக்கும் கீரமங்கலம் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு உடைகளை மாற்றிக் கொண்டு தடுப்பு கட்டையில் அமர்ந்தார்.

அப்போது அதனருகில் உள்ள இரும்பு கம்பியால் ஆன தடுப்பு முள் கம்பிவேலியில் இருந்து மின்சாரம் குமாரவேல் மீது பாய்ந்து உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே இறந்த நிலையில் அவர் குப்புற கிடந்துள்ளார். அந்த வழியாக சென்றவர்கள் மது போதையில் யாரோ கிடப்பதாக நினைத்து அவரை மீட்காமல் சென்றுவிட்டனர்.

இதேபோல் போல கீரமங்கலம் வடக்கு பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (65). இவர், கீரமங்கலம் மேற்கு பேட்டை பகுதியில் ஒரு வீட்டில் கூலி வேலை செய்துவிட்டு குளிப்பதற்காக மாரியம்மன் கோவில் அருகில் உள்ள குளத்தில் தனது துண்டை துவைத்து தடுப்பு வேலியில் போடும் போது மின்சாரம் பாய்ந்து துடி துடித்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அவரை மீட்க முயன்றும் பலனில்லை. சுந்தரமும் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னரே குமாரவேலும் அதே தடுப்பு வேலியில் இருந்த மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனே மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்து மின்சாரம் நிறுத்தப்பட்டது.

மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரவியதால் பொதுமக்களும், இறந்தவர்களின் உறவினர்களும் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்து இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீரமங்கலம் போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளிக்க சென்ற தொழிலாளிகள் 2 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் கீரமங்கலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மின் கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவு

கீரமங்கலத்தில் தொடர்ந்து அடுத்தடுத்து 2 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததையடுத்து மின்சாரம் நிறுத்தப்பட்டு சோதனை செய்தனர். அப்போது குளத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முள் கம்பிவேலியில் ஆங்காங்கே மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதில், ஒரு இடத்தில் மின்கசிவு ஏற்பட்டு தடுப்பு வேலியில் மின்சாரம் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments