டெல்லியில் பாதுகாப்பு துறையில் பணியாற்றிய பெண் பலாத்காரம் செய்து கொலை- மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!



டெல்லியில் பாதுகாப்பு துறையில் பணியாற்றிய சபியா என்ற இஸ்லாமிய பெண்மணி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: டெல்லியில் கடந்த வாரம் சபியா சைஃபி என்ற பெண் காவல் அதிகாரி நான்கு நபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதுடன் 50 இடங்களில் வெட்டப்பட்டும், மார்பகங்களை அறுத்தும் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த படுபாதகச் செயலைக் கேள்வியுற்ற போது நெஞ்சம் பதைபதைக்கிறது.

ஒரு நாட்டின் தலைநகர் அதிலேயே பெண்களின் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக் குறியாக இருப்பது நம்மையெல்லாம் தலைகுனிய வைக்கிறது. இந்தக் கொடூரச் சம்பவம் நடைபெற்று ஒரு வாரகாலமாகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படாதது வெட்கத்திற்குரியது.

டெல்லியின் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒன்றிய அரசு மெத்தனப்போக்குடன் செயல்படுவதே இதற்குக் காரணம். சபியாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். இதுபோன்று மற்றொரு பெண் பாதிக்கப்படக்கூடாது என்றால் குற்றவாளிகளை விரைவில் கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

21 வயதான டெல்லி சிவில் டிஃபென்ஸ் (டிசிடி) ஊழியர்தான் அந்த பெண். அவர் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட, சபியா (பெயர் மாற்றப்பட்டது) 26ம் தேதி மாலை தனது அலுவலகத்திலிருந்து கடத்தப்பட்டு ஃபரிதாபாத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பிறகு, குத்திக் கொல்லப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். பெண்ணின் உடலில் பல இடங்களில் வெட்டு காயம் உள்ளது. வாய் குறி வைத்து கத்தியால் குத்தப்பட்டுள்ளது. மார்பகங்கள் திட்டமிட்டு வெட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணுடன் வேலை பார்த்த இரண்டு பேர்தான், இந்த குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று சபியா குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் தலைமறைவாக உள்ளதாகவும், இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இருவர் மீதும் புகார் அளிக்க சங்க விஹார் காவல்நிலையத்தை அணுகியதாகவும், ஆனால் போலீசார் தங்கள் புகாரை ஏற்று புகாரை பதிவு செய்ய மறுத்தனர் என்பதும் குடும்பத்தார் குற்றச்சாட்டாக உள்ளது.

நியாயமான விசாரணை, அதிலும் குறிப்பாக, சிபிஐ விசாரணை கோரி சங்கம் விகாரில் பாதிக்கப்பட்ட பெண் குடும்பம் தங்கள் வீட்டின் வெளியே அமர்ந்து கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் ஒருவர் அளித்த பேட்டியில், "சபியா நான்கு மாதங்களுக்கு முன்புதான் பணிக்குச் சேர்ந்தார். வழக்கம் போல், கடந்த 26ம் தேதி அலுவலகம் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இரவு 8 மணியளவில் அவர் தொலைபேசியில் அழைத்துள்ளார். ஆனால் குடும்பத்தார் போனை எடுக்கும் முன்பாக கட் ஆகிவிட்டது. மிஸ்ட் காலை பார்த்து மறுபடி அழைத்தபோது, போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. நாங்கள் பயந்து போய் ஆபீசுக்கு ஓடிப்போனோம். அவர்கள் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

அலுவலகத்தின் காவலாளி பார்வையாளரின் பதிவேட்டை காட்ட மறுத்துவிட்டார். அலுவலகத்தின் தனிப்பட்ட ஆவணங்களை யாரிடமும் காண்பிக்க அனுமதி இல்லை என்று கூறிவிட்டனர்" என்று ஆதங்கத்தோடு தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments