புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தாமாக முன்வர வேண்டும்: கலெக்டர் கவிதாராமு வேண்டுகோள்!



கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் தாமாக முன்வர வேண்டும் என கலெக்டர் கவிதாராமு வேண்டுகோள் விடுத்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அதிகாரிகள் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி பேசியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் தினமும் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த தகவல்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது.

எனவே தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்ளும் வகையில், ஆட்டோ விளம்பரம் செய்தல், தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தல், பொதுமக்களை அழைத்து வருதல் போன்ற பணிகளை உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் தவறாது மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

வர்த்தக சங்கத்தினர் தங்களது கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் தவறாது கொரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தவறாமல் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பொதுமக்களும் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி முகாம் நடைபெறும் பகுதிகளில் முகாமை சிறப்பான முறையில் நடத்திடும் வகையில் பொது சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

மாவட்டத்தில் ஏற்கனவே பல்வேறு ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று மற்ற ஊராட்சிகளிலும் பொதுமக்களுக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். 

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி, வருவாய் கோட்டாட்சியர்கள் அபிநயா, தண்டாயுதபாணி, சொர்ணராஜ், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, இணை இயக்குனர் (ஊரக நலப்பணிகள்) ராமு, துணை இயக்குனர்கள் (சுகாதாரப் பணிகள்) அர்ஜுன்குமார், கலைவாணி, நகராட்சி ஆணையர்கள் நாகராஜன், திருச்செல்வம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments