கீரமங்கலம் பகுதியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டும் பொதுமக்கள்! பரிசு அறிவித்து அசத்தும் ஊராட்சி மன்ற தலைவர்கள்!!



கீரமங்கலம் பகுதியில் கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்கு பொதுமக்கள் தயக்கம் காட்டுவதால் ஊராட்சி சார்பில் அவர்களை ஊசி போட வைக்கும் முயற்சியாக பரிசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதே சிறந்த வழி என்று அரசு தொடர்ந்து பல்வேறு வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் கடந்த மாதம் வரை தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக சென்றனர்.

ஆனால் அப்போது தடுப்பூசிகள் தட்டுப்பாடு இருந்ததால் பலர் ஊசி போடாமல் திரும்பினார்கள். பல சுகாதார நிலையங்களில் டோக்கன் கொடுத்து முன்பதிவு செய்து தடுப்பூசிகள் போட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இதே நிலை நீடித்தது.

இந்த நிலையில் தற்போது தடுப்பூசிகள் போதிய அளவு இருக்கும் நிலையில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். அதனால் ஒவ்வொரு கிராமத்திலும் தினசரி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் குறைவான நபர்களே தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். அதனால் தேசிய வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்வோர் கட்டாயம் ஊசி போடவேண்டும். அப்போது தான் வேலை கொடுக்கப்படும் என்று கூறி தடுப்பூசிகள் போட்டு வருகின்றனர்.

செரியலூர் கிராமத்தில் வருவாய்த்துறை ஊழியர்களுடன் சுகாதார பணியாளர்கள் இணைந்து வீடுவீடாக தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.

அதேபோல கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என்று ஊராட்சி சார்பில் பரிசு திட்டம் அறிவித்த நாளில் மட்டும் சுமார் 400 பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதே முறையை மற்ற ஊராட்சிகளிலும் செயல்படுத்தி கொரோனா தடுப்பூசி போட விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments