கல்லல் அருகே கிராம சாலையில் பேவர் பிளாக் பதிக்கப்பட்டதாக ரூ.14 லட்சம் முறைகேடு: ஆர்டிஐ மூலம் வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்!!



சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே பேவர் பிளாக் பதிக்காமலேயே பதித்ததாக கணக்கு காட்டி ரூ.14 லட்சம் முறைகேடு செய்துள்ளது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கல்லல் அருகே பனங்குடியில் 200-க் கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமத்தில் உள்ள நடுவளவு தெருவில் உள்ள சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு சிமென்ட் சாலையாக மாற்றப்பட்டது. அதன் பின் போதிய பராமரிப்பு இல்லாததால் சாலை யின் பல இடங்கள் சேதமடைந்தன.

சாலையைச் சீரமைத்துத் தருமாறு கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இக்கோரிக்கை தொடர்பாக கிராம மக்கள், கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தனர். அப்போது, இச்சாலையில் ஏற்கெனவே பேவர் பிளாக் கற்கள் பதித்து விட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் சாலையில் நடந்த சீரமைப்புப் பணிகள் குறித்த தகவல்களை கேட்டனர். அதில், நடுவளவு தெருவில் உள்ள சாலையில் தேசிய வேலை உறுதித் திட்டத்தில் ரூ.14 லட்சத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பனங்குடியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் கூறியதாவது: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் சாலை அமைப்பதில் நடந்த முறைகேடு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளோம். மேலும் இதேபோல் 4 சாலைகள், 2 தடுப்பணைகளை அமைக்காம லேயே, அமைத்ததாகக் கூறி முறைகேடு நடந்துள்ளது. முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.

இதுகுறித்து கல்லல் ஒன்றிய அதிகாரி களிடம் கேட்டபோது, ‘புகார் குறித்து விசாரிக் கப்படும்,’ என்று தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments