வடகிழக்கு பருவமழை: முன்னேற்பாடுகள், உபகரணங்களுடன் 24X7 தயார் நிலையில் தீயணைப்பு - மீட்புப் பணித்துறை




வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தகுந்த முன்னேற்பாடுகள், உபகரணங்களுடன் 24X7 செயல்படும் வகையில் தயார் நிலையில் உள்ளதாக தீயணைப்பு - மீட்புப் பணித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்துத் தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’வடகிழக்குப் பருவமழைக் காலமாக இருப்பதால் பேரிடரை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் அனைத்து நிலையங்களும் உபகரணங்களுடன் முழு வீச்சில் 24X7 செயல்படும் வகையில் தயார் நிலையில் உள்ளது.

மேலும், வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்புப் பகுதிகளில் சிக்குண்ட நபர்களைப் பாதுகாப்பாக மீட்க ரப்பர் படகுகள் மற்றும் மோட்டர் படகுகள், சாலைகளில் விழும் மரங்களை அகற்ற மின்விசை ரம்பங்கள், குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள வெள்ள நீரினை வெளியேற்ற நீர் இறைக்கும் பம்புகள் (Supra jet pump), Generators, Inflatable emergency light மற்றும் மீட்புப் பணிக்கான கயிறுகள், லைஃப் பாய், லைஃப் ஜாக்கெட் உள்ளிட்ட அனைத்து செயற்கருவிகளும் தயார் நிலையில் உள்ளன். அனைத்து மாவட்டங்களிலும் திறன்மிக்க தீயணைப்பு நீச்சல் வீரர்கள் கொண்ட Swimmers Rescue Team மற்றும் கயிறு மூலம் மீட்புப்பணி மேற்கொள் பயிற்சி பெற்ற Rope Rescue Team என இரு கமாண்டோ படைகள் பேரிடரை எதிர்கொள்ள முழுவீச்சில் தயார் நிலையில் உள்ளன.

கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை அடையாளம் காட்டும் கருவிகள் (Victim Location Unit), ரோப் லான்ச்சர், ரோப் ரைடர் (Rope Launcher and Rope Rider) மற்றும் தெர்மல் இமேஜிங் கேமிரா (Thermal Imaging Camera) ஆகியவை தயார் நிலையில் உள்ளன. வெள்ள காலங்களில் தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கும் பொருட்டு தகவல் தொடர்பு சாதனங்களான வாக்கி டாக்கி (Walkie Talkiel, Wireless) போன்றவையும் தயார் நிலையில் உள்ளன.

தாழ்வான பகுதிகள், வெள்ளநீர் சூழும் குடியிருப்புப் பகுதிகள் போன்றவை கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாதிரி ஒத்திகைப் பயிற்சி நடத்தி, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளக் காலங்களில் பிற அரசுத் துறையினருடன் ஒருங்கிணைந்து மீட்புப்பணி மேற்கொள்ளப்படும். மேலும், வானிலை ஆய்வு மையத்தின் தகவல் பெற்று அன்றாட வானிலை நிலவரத்திற்குகேற்ப மீட்புப் பணிக்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

மாநிலம் முழுவதும் தன்னார்வலர்களைக் கொண்ட தீயணைப்பு மீட்புக் குழுவினர் 8462 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு பேரிடர்க் காலங்கள் மற்றும் தீவிபத்து மற்றும் மீட்புப்பணி அழைப்புகளில் பயன்படுத்தத்தக்க வகையில் தயார் நிலையில் உள்ளனர்.

அவசர உதவிக்குத் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

·தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டுப்பாட்டு அறை 101, 112, மற்றும் தீ செயலி (THEE APP).

மாநில பேரிடர்க் கட்டுப்பாட்டு அறை - 1070 & 9445869843 .

மருதம் கட்டுப்பாட்டு அறை - 044-24331074 & 24343662.’’

இவ்வாறு தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறை தெரிவித்துள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments