ஐகோர்ட்டு உத்தரவுப்படி இலங்கை கடற்படையின் அத்துமீறலால் கடலில் உயிரிழந்த கோட்டைப்பட்டினம் மீனவர் ராஜ்கிரண் உடல் தோண்டி எடுத்து மறு உடற்கூறு ஆய்வு!



இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த கோட்டைப்பட்டினம் மீனவர் உடல், ஐகோர்ட்டு உத்தரவுப்படி நேற்று தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த மாதம் 18-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் விசைப்படகு மீது இலங்கை கடற்படையினர் கப்பலால் மோதினர். இதில் படகு தண்ணீரில் மூழ்கியதில் மீனவர் ராஜ்கிரண் (வயது 30) உயிரிழந்தார். பின்னர் இலங்கையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இறந்த மீனவர் ராஜ்கிரணின் மனைவி பிருந்தா, தன்னுடைய கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், ராஜ்கிரணை அடக்கம் செய்யும் போது, அவரது உடலை முழுமையாக பார்க்க அனுமதிக்கவில்லை. ராஜ்கிரண் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கவில்லை, அவரை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொன்று இருப்பதாக சந்தேகம் இருப்பதாகவும் கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜ்கிரணின் உடலை மணமேல்குடி தாசில்தார் முன்னிலையில் மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். மேலும் ராஜ்கிரண் சுடப்பட்டு இறந்தாரா? அல்லது கடலில் மூழ்கி இறந்தாரா? என்பதை தெளிவுபடுத்தும் வகையில் மீனவர் உடல் மறு பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து கோட்டைப்பட்டினத்தில் நேற்று மீனவர் ராஜ்கிரணின் உடலை தோண்டி எடுக்கும் பணியை வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டனர். ஓய்வு பெற்ற தடயவியல் துறை பேராசிரியர் சேவியர் செல்வ சுரேஷ் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தமிழ்மணி, சரவணன், மணமேல்குடி தாசில்தார் ராஜா, கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்ன குப்பன், மனுதாரர் தரப்பில் ராஜ்குமார் மனைவி பிருந்தா, மீனவர் காப்போம் அமைப்பின் மாநிலச் செயலாளர் தர்மதுரை, எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
பின்னர் தோண்டி எடுக்கப்பட்ட உடல் ராஜ்கிரணின் உடல்தான் என்று உறுதிபடுத்த ராஜ்கிரணின் மனைவி பிருந்தாவை அடையாளம் காட்டச் சொன்னார்கள். ராஜ்கிரணின் மனைவி பிருந்தா, எனது கணவரின் 2 கைகளிலும் பச்சை குத்தி இருக்கும் என்று கூறினார். பின்னர் அவர் உறவினர் ஒருவர் அருகே வந்து 2 கைகளையும் பார்த்தார். 2 கைகளிலுமே பச்சை குத்தப்பட்டு இருந்தது. 

இதையடுத்து தோண்டி எடுக்கப்பட்ட உடல் ராஜ்கிரணின் உடல்தான் என்று உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து உடல் ஆம்புலன்ஸ் மூலம் மறு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரிக்கு எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும் ராஜ்கிரண் உடல் மீண்டும் கோட்டைப்பட்டினம் கொண்டுவரப்பட்டு அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

ராஜ்கிரணின் உடலை தோண்டி எடுத்தபோது, அவரது பெற்றோர் தரப்பில் யாரும் வரவில்லை. ராஜ்கிரணின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்வதில் ராஜ்கிரணின் பெற்றோர்களுக்கு உடன்பாடு கிடையாது என்று கூறப்படுகிறது. இதனால் உடல் தோண்டி எடுக்கும் இடத்திற்கு ராஜ்கிரண் பெற்றோர்களோ அல்லது ராஜ்கிரண் உறவினர்களோ யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments