மெகா தடுப்பூசி முகாம் அடுத்த வாரத்துக்கு தள்ளிவைப்பு






   
மெகா தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டிருந்தாலும் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு தேடி சென்று தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் அரசு தீவிரமாக உள்ளது. இதையொட்டி ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது. இதற்காக 50 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

அதேபோல் நாளை (சனிக்கிழமை) 8-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதற்காக 50 ஆயிரம் முகாம்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நாளை நடைபெற இருந்த மெகா தடுப்பூசி முகாம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

 இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7.64 கோடி பேர். இதில் இதுவரை 5 கோடியே 92 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி 71 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 2-வது தவணை தடுப்பூசி 31 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரை நடைபெற்ற 5 சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 1,51,13,382 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இன்னும் 2-வது தவணை கோவேக்சின் தடுப்பூசி 13 லட்சம் பேருக்கு செலுத்த வேண்டி உள்ளது. 2-வது தவணை கோவிஷீல்டு தடுப்பூசி 48 லட்சம் பேருக்கு செலுத்த வேண்டியுள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு காரணமாக 16 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் முகாம்கள் அமைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி தற்போது தீபாவளி பண்டிகையாக இருப்பதால் சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள் விடுமுறை எடுத்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

இந்த சமயத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தினால் அவர்கள் விடுமுறையை ரத்து செய்துவிட்டு வேலைக்கு வரும் சூழல் உருவாகும். இது அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்.

மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி தடுப்பூசி போட்டால் காய்ச்சல் வரும் என்ற பயத்தில் சிலர் ஊசி போட பயப்படுவார்கள். கூப்பிட்டால் கூட சிலர் வரமாட்டார்கள். அடுத்த வாரம் பார்த்துக்கொள்ளலாம் என்பார்கள். இதை எல்லாம் கருத்தில் கொண்டு மெகா தடுப்பூசி முகாமை நாளை நடத்துவதற்கு பதில் அடுத்தவாரம் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

மெகா தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டிருந்தாலும் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு தேடி சென்று தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments