பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து 10,300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு






ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ் ராஜகண்ணப்பன் தலைமையில், இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர். கே.கோபால், போக்குவரத்துத் துறை ஆணையர் எஸ். நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும், அரசு கூடுதல் செயலாளர், போக்குவரத்துத் துறை, காவல்துறை அலுவலர்கள், சென்னை மாநகராட்சி அலுவலர்கள், தாம்பரம் நகராட்சி ஆணையர், பூந்தமல்லி நகராட்சி ஆணையர், சென்னை பெருநகர வளர்ச்சி குழும கண்காணிப்பு பொறியாளர், போக்குவரத்துத்துறை தலைவர் அலுவலக தனி அலுவலர், சாலை போக்குவரத்து நிறுவன இயக்குநர் மற்றும் அனைத்து மேலாண் இயக்குநர்கள் கலந்து கொண்டனர். 




பின்னர் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் 11/01/2022 முதல் 13/01/2022 வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன்,  4,000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 10,300 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகள் இயக்கப்படும்.

பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக  16/01/2022 முதல் 18/01/2022 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் 3,797 சிறப்புப் பேருந்துகளும், ஏனய பிற முக்கிய ஊர்களிலிருந்து 6,612 பேருந்துகளும்  என ஆக மொத்தம் 16,709 பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னையிலிருந்து மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் இரயில் நிலையப் பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து 11/01/2022 முதல் 13/01/2022 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்


பொங்கல் 2022; சிறப்பு பேருந்துகள் இயக்கம்

1. மாதவரம் புதிய பேருந்து நிலையம்; செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் மற்றும் ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள்.  
   
2.    கே.கே. நகர் மா.போ.க பேருந்து நிலையம்; ECR வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள். 
    
   3. அ)    தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (MEPZ); திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்.
    
      ஆ)    தாம்பரம்  இரயில் நிலையப் பேருந்து நிறுத்தம்; திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
    
4.    பூந்தமல்லி பேருந்து நிலையம்; வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகள்.     

5.    புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு; மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத் தவிர, இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை,  திண்டுக்கல், விருதுநகர்,  திருப்பூர், ஈரோடு,  இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம்  மற்றும் பெங்களூரு)
     
வழித்தட மாற்றம்

முன்பதிவு செய்துள்ள பேருந்துகள் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம்  கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நாசரத்பேட்டை, வெளிச் சுற்றுச்சாலை
(Outer Ring Road) வழியாக வண்டலூர் சென்றடைந்து, ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று, தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரிலிருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கார் மற்றும் இதர வாகனங்கள்

கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருக்கழுகுன்றம் - செங்கல்பட்டு அல்லது  ஸ்ரீ பெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

இந்த சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புவோர்,  www.tnstc.in, tnstc official app, www.redbus.in, www.paytm.com மற்றும் www.busindia.com போன்ற இனையதளங்கள் மூலமாக முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151, 044 24749002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

பயணிகளின் நலன் கருதி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும்.  பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள்  அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  எனவே பொதுமக்கள்  மேற்கூறிய பேருந்து சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறும், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

பொதுமக்களின் வசதிக்காக புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையத்திலிருந்து மேற் கூறிய பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும். 

இவ்வாறு தமது பேட்டியின்போது போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments