பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்




தமிழகத்தில் கொரோனா தொற்று பரவத்தொடங்கிய காலமான கடந்த ஆண்டு மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

முதலில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதும் படிப்படியாக தளர்வுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

மு.க.ஸ்டாலின்ஆலோசனை

இந்தநிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 31-ந்தேதி முடிவடைய உள்ள நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவான ஒமைக்ரானும் அச்சுறுத்தி வருவதால், அடுத்து எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கை குறித்தும், தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிப்பது குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இதுதொடர்பாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு நடைமுறை

தமிழ்நாட்டில், கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், 31-12-2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

பண்டிகை காலங்களில், கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தற்போது தமிழ்நாட்டில் பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயை கருத்தில் கொண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும், சென்னை தலைமை செயலகத்தில் எனது தலைமையில் 24-12-2021 அன்று (நேற்று) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பங்கேற்றவர்கள்

இக்கூட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச்செயலாளர், அரசு துறைச்செயலாளர்கள் மற்றும் மருத்துவ வல்லுனர்களான உலக சுகாதார நிறுவனத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் இயக்குனர் மருத்துவர் மனோஜ் முர்ஹேக்கர், துணை இயக்குனர் டாக்டர் பிரதீப் கவுர், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஜே.வி.பீட்டர், உலக சுகாதார மையத்தின் தென் மண்டல குழு தலைவர் டாக்டர் கே.என். அருண்குமார், இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் பழனிச்சாமி, ஓய்வுபெற்ற நகர சுகாதார அலுவலர் டாக்டர் பி.குகானந்தம், அப்போலோ மருத்துவனையின் தொற்றுநோய் வல்லுனர் டாக்டர் வி.ராமசுப்ரமணியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து அனுமதிக்க முடிவு

நம் மாநிலத்தில், கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் நோய்களை கட்டுப்படுத்துதல் மற்றும் அவற்றின் பரவலாக்கத்தினை குறைத்தல் குறித்து பல்வேறு ஆலோசனைகளை மருத்துவ வல்லுனர்கள் வழங்கினார்கள். மருத்துவ குழுவின் ஆலோசனையின்படி, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள், உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடுவதால் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளதை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் பின்வரும் வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அன்புடன் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

*பொதுமக்கள் அனைவரும் கூட்டமாக கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

*பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வரும்போதும் கட்டாயம் முக கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

*மாவட்ட நிர்வாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தவறாது தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

*அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் ஆகியவற்றிற்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி செயல்பட வேண்டும்.

*கொரோனா நோயை கட்டுப்படுத்த பொதுமக்கள் நலன்கருதி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments