புதுக்கோட்டை அருகே அரசு பள்ளியில் தீ விபத்து கணினிகள் எரிந்து நாசம்




புதுக்கோட்டை அருகே அரசு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் கணினிகள் எரிந்து நாசமானது.

தீ விபத்து

புதுக்கோட்டை அருகே வடசேரிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் வளாகத்தில் ஒரு அறையில் கணினிகள் மற்றும் அறிவியல் உபகரண பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன் பக்கத்து அறையில் அவ்வப்போது வகுப்புகள் நடைபெறும். இந்த நிலையில் கணினிகள் இருந்த அறையில் நேற்று முன்தினம் மாலை திடீரென கரும்புகை வெளியேறி தீப்பிடித்தது. அருகில் இருந்தவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் 3 கணினிகள் எரிந்து நாசமானது. அந்த அறையில் கரும்புகை படர்ந்திருந்தது. மேலும் சில பொருட்கள் கருகியிருந்தன.

கட்டிடத்தை இடிக்க கோரிக்கை

மின்கசிவு காரணமாக கணினியில் தீப்பிடித்து எரிந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது. பள்ளி நேரம் முடிந்த பின் இந்த விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீப்பிடித்த அறை தற்போது பூட்டப்பட்டன. இந்த தீ விபத்து தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் லதா, வெள்ளனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மாணவ-மாணவிகள் நடமாடும் வளாகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த கட்டிடத்தின் ஒருபகுதி தீ விபத்தில் சேதமடைந்ததால் இதனை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments